கொரோனாவிற்கு சித்த மருந்தை ஆய்வு செய்ய உத்தரவு

கொரோனாவிற்கு கண்டுபிடித்துள்ள சித்த மருந்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், தான் 66 மூளிகைகளைக் கொண்டு கொரோனாவிற்கு மருந்து தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மருந்தை தினமும் கொதிக்க வைத்து 2 வேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் பக்கவிளைவுகள் எதுவும் இதில் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மருந்தை மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய உத்தரவிடுமாறு சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தொடர்பான விசாரணை நேற்றும் இன்றும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் முடிவில், சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ள மருந்தை ஜூன் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள மருத்துவக் கழகத்தின் ஹோமியோபதி இயக்குனரிடம் அளித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த மருந்தை நிபுணர் குழு ஆய்வு செய்து ஜூன் 30 தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது தமிழக அரசு எந்த ஆய்வின் அடிப்படையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி வருகிறார்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு இன்று பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், இந்திய மருத்துவ கழகத்தின் ஆய்வு அடிப்படையில் தான் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் சென்னை அரும்பாக்கத்தில் 12 கோடி ரூபாய் செலவில் மருத்துவ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts