கரோனா தொற்றால் காலமான ஏ.எல்.ராகவன்

பிரபல பின்னணி பாடகாரான ஏ.எல்.ராகவன் கரோனா தொற்றால் காலமாகியிருப்பது உறுதியாகியுள்ளது.
‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் மூலம் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் (87) திடீர் உடல்நலக் குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மருத்துவமனையில் தொடர்ந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
சென்னை, ராயப்பேட்டையில் வசித்து வந்த ஏ.எல்.ராகவன் 1947-ம் ஆண்டு ‘கிருஷ்ண விஜயம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார். அடுத்து ‘சுதர்ஸன்’ என்ற படத்தில் கண்ணனாக நடித்தார். 1950-ம் ஆண்டு வெளியான ‘விஜயகுமாரி’ படத்தின் மூலம் பாடகரானார். அதில் குமாரி கமலாவுக்காக பெண் குரலில் பாடலைப் பாடினார். அப்போதிலிருந்து பிரபலமாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் பல்வேறு பாடல்களை ஏ.எல்.ராகவன் பாடியுள்ளார்.
எம்.என்.ராஜத்தின் கணவர்
இவர் பழம்பெரும் நடிகையும் டப்பிங் கலைஞருமான எம்.என்.ராஜத்தின் கணவர் ஆவார்.
நடிகர் நாகேஷுக்குப் பல பாடல் களைப் பாடியுள்ளார். மேடைகளில் ஆர்க்கெஸ்ட்ரா கச்சேரிகள் உருவானதன் முன்னோடி என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மேலும், ‘அலைகள்’, ‘அகல்யா’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு பிரம்மா என்ற மகனும், நளினா என்ற மகளும் உள்ளனர்.
முதல்வர் இரங்கல்
ஏ.எல்.ராகவனின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர் இரங் கல் தெரிவித்துள்ளனர். அரசின் வழிகாட்டுதல்படி மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் ஏ.எல்.ராகவனின் உடலுக்கு நேற்று மாலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

Related posts