கரண் ஜோஹர் படங்களைப் புறக்கணிப்போம்

#JusticeForSushant (சுஷாந்துக்கு நீதி) என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பாலிவுட்டின் வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்டுதான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றம் சாட்டி இந்தத் தலைப்பின் கீழ் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் கரண் ஜோஹரின் திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்த ஹேஷ்டேகில் பலர் பகிர்ந்து வருகின்றனர். கரண் ஜோஹர் பெரிய நடிகர்களின் வாரிசுகளை மட்டுமே வைத்துப் படம் எடுத்து அவர்களை விளம்பரப்படுத்துவதையே பிரதானமாக வைத்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
“கரண் ஜோஹர் மற்றும் கான்களின், அவர்கள் ஆதரவாளர்களின் படங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அது எவ்வளவு பெரிய பொழுதுபோக்குப் படமாக இருந்தாலும் சரி. அதைப் புறக்கணித்து இங்கு யார் தலைவன் என்பதைக் காட்டுங்கள். சுஷாந்தின் வெள்ளந்திப் புன்னகைக்கு நாம் செய்யக்கூடிய நியாயம் இதுவே” என ஒரு பயனர் பகிர்ந்திருந்தார்.
“ஒரு கொலைகாரனை, தேசத் துரோகியை, படிப்பறிவில்லாத ஒருவனை சூப்பர் ஸ்டார் ஆக்குவீர்கள். ஆனால், நன்கு படித்த, இயற்பியல் போட்டியில் வெற்றி பெற்ற ஒருவரை ஆக்கமாட்டீர்கள்” என்று இன்னொரு பயனர் கூறியிருந்தார்.
இதே ரீதியில் பலரும் ட்வீட் செய்து வர, சுஷாந்த் ரசிகர்கள் சிலர், அவரது கடைசிப் படமான ‘தில் பெச்சாரா’வை திரையரங்கில் மட்டுமே வெளியிட வேண்டும், ஓடிடி வெளியீட்டுத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பலரும் #JusticeForSushant இந்த ஹேஷ்டேகில் கருத்துகளைப் பதிவிடவே, இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.

Related posts