இரண்டு நாட்களில் திருமணமா? – ஹன்சிகா பதில்

இரண்டு நாட்களில் திருமணம் என்று வெளியான தகவலுக்கு ஹன்சிகா பதிலளித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இரண்டு மொழிகளிலுமே முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜமீல் இயக்கத்தில் உருவாகும் ‘மஹா’ படத்தில் நடித்து வருகிறார்.
இது நாயகியை மையப்படுத்திய படமாகும். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் சிம்புவும் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அவ்வப்போது ஹன்சிகாவுக்கு திருமணம் என வதந்தி பரவுவது வழக்கம். அதே போல் இன்று (ஜூன் 11) தனது சமூக வலைதளத்தைக் குறிப்பிட்டு திருமண வதந்தி பரப்பியவருக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் ஹன்சிகா.
ஹன்சிகாவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு “இன்னும் இரண்டு நாட்களில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார் ஹன்சிகா” என்று தெரிவித்தார்கள். அதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் “அராஜகம்.. அடக்கடவுளே.. யார் இவர்?” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்கு ஹன்சிகாவின் நண்பர் என்னிடம் கூடச் சொல்லவில்லையே என்று கிண்டலாகக் கேட்க, அதற்கு “ஏனென்றால் எனக்கும் இப்போதுதான் தெரிய வந்தது” எனத் தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

Related posts