இறுதி சடங்கில் 20 பேர் – மதுபானக்கடையில் 1000 பேர்!

கொரோனா தொற்றால் 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.

ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, அசாம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மதுக் கடைகளில் கடந்த சில நாட்களாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், அடித்து பிடித்துக்கொண்டு மக்கள் மதுவை வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் எழுந்து வருகின்றன.

எனவே இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆன் லைனில், மறைமுகமாக மதுபான விற்பனையை நடத்த பரிசீலிக்குமாறு மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியது.

இந்நிலையில், மதுபானக் கடைகளில் கூடும் கூட்டம் குறித்து சிவசேனா மத்திய அரசை குற்றம்சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக, சிவசேனா மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இறுதிச் சடங்கிற்கு 20 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஏனென்றால் ஆன்மா ஏற்கனவே உடலை விட்டு வெளியேறிவிட்டது. 1000 பேர் ஒரு மதுபான கடைக்கு அருகில் கூடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அங்கு தான் ஆன்மாக்கள் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

Related posts