சூர்யாவுக்கு நாயகியாகும் ராஷி கண்ணா

‘அருவா’ படத்தில் சூர்யாவுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘அருவா’ படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்றது. அனைத்துமே கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா ஊரடங்கினால் ராஷி கண்ணா தனது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் “உங்களுடைய அடுத்த படங்கள்” என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராஷி கண்ணா “தமிழில் ‘அரண்மனை 3’ மற்றும் சூர்யா சார் – ஹரி சார் இணையும் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் இரண்டு படங்கள் இருக்கிறது. அவை கரோனா லாக்டவுன் முடிந்தவுடன் தான் என்ன நிலைமை என்பது தெரியவரும். அதற்குப் பிறகுச் சொல்கிறேன்” என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம் ‘அருவா’ படத்தில் அவர் நாயகியாக நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

Related posts