யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் தனிமைப்படுத்துமாறு உத்தரவு

கொழும்பில் கோரோனா வைரஸ் பரவல் அபாய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏற்றிவந்த பாரவூர்தி சாரதியையும் விடத்தல்பளை படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இவ்வாறு உத்தரவிட்டார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு -12 பகுதியிலிருந்து 8 பேர் பாரவூர்தியில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்தனர்.

அவர் 8 பேரும் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களை ஏற்றி வந்த சாரதியும் கண்டறியப்பட்டார்.

குருநகர், பீச் வீதியைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணம் ஐந்துசந்தி- ஒஸ்மானியா வீதியைச் சேர்ந்த ஒருவர், சங்கானை- ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவர், சுழிபுரம் – தொல்புரத்தைச் சேர்ந்த ஒருவர் தெல்லிப்பழை (சந்திக்கு அருகில்) ஒருவர், நாவற்குழி வீட்டுத்திட்டம் பகுதியைச் சேர்ந்த மூவர் மற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சாரதி ஆகிய ஒன்பது பேரே இவ்வாறு தனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

சாரதி யாழ்ப்பாணத்தில் இருந்து அத்தியாவசிய சேவைக்கான அனுமதிப்பத்திரத்துடன் சென்றுள்ளார். ஏனையவர்கள் தொழில்நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர்.

சாரதி உள்பட 9 பேரையும் விடத்தற்பளையில் உள்ள படை முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், 9 பேரையும் மே மாதம் 26ஆம் திகதி வரை விடத்தற்பளை படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்க உத்தரவிட்டார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Related posts