திருச்சி அம்மா உணவகங்களில் இனி சும்மாவே சாப்பிடலாம்!

திருச்சியில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்திலும் இனி, கட்டணம் ஏதுமில்லாமல் சும்மா சாப்பிடலாம். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர அதிமுக செய்துள்ளது.
திருச்சி மாநகரில் புத்தூர் அபிஷேகபுரம், தென்னூர் உழவர் சந்தை, உறையூர் சாலை ரோடு, ஜங்ஷன் ராக்கின்ஸ் சாலை, கல்கண்டார்கோட்டை, மற்றும் அரியமங்கலம் ஜெகநாதபுரம் ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் கட்டணம் ஏதுமின்றி அனைவருக்கும் உணவளிக்க ஏற்பாடு செய்திருக்கிறது திருச்சி மாநகர அதிமுக.
இந்த 6 அம்மா உணவகங்களிலும் மே 3-ம் தேதி வரை காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்குவதற்கான செலவினை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான தொகையை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் இன்று வழங்கினார்.
இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் இந்த ஊரடங்கு காலத்தில் தங்களின் உணவுத் தேவையை ஓரளவுக்காவது சமாளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts