ரஜினியின் ஆசியோடு ‘சந்திரமுகி 2

ரஜினியின் ஆசியோடு ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கவுள்ளதாக லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக எதுவுமே அறிவிக்கப்படாமல் இருந்தது.

இடையே, ‘தர்பார்’ படத்துக்காக அளித்த பேட்டியில் ரஜினியிடம் ‘சந்திரமுகி 2’ கதைக்கான ஒன்லைன் குறித்துப் பேசியதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருந்தார். அப்போது பி.வாசு, தான் ‘சந்திரமுகி 2’ இயக்கவுள்ளதை உறுதிப்படுத்தியிருந்தார்.

இதனிடையே, ‘சந்திரமுகி 2’ படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் லாரன்ஸ். பி.வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இது தொடர்பாக லாரன்ஸ் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

“நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, உங்கள் அனைவரும் ஒரு சந்தோஷமான செய்தியைப் பகிர்கிறேன். எனது அடுத்த படங்களில் ஒன்று என் தலைவரின் படமான ‘சந்திரமுகி 2’. தலைவரின் அனுமதி மற்றும் ஆசியுடன் இந்தப் படத்தில் நடிப்பது என் அதிர்ஷ்டம். பி.வாசு சார் இயக்க, எனது அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சார் தயாரிக்கவுள்ளார்”.

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Related posts