எனக்கு திருப்தி இல்லை ஏமாற்றம் – ரஜினிகாந்த்

எனக்கு திருப்தி இல்லை ஏமாற்றம் தான் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி அளித்தார்.

சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ம இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது .2021 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகாலம் மட்டுமே உள்ள நிலையில் இந்த ஆலோசனைக்கூட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் 37 மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எப்போது கட்சி தொடங்குவது, கட்சியின் பெயர், கொடி போன்றவற்றை முடிவு செய்வது, கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா? அல்லது தனித்து களமிறங்கலாமா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நிறைவு பெற்றது.
நிர்வாகிகளுடன் 1.30 மணி நேரத்திற்கு மேலாக நடிகர் ரஜினி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு ஆண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன். கட்சி தொடங்குவது பற்றி மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். எனக்கு நிறைய கேள்விகள் இருந்தது அதுகுறித்த பதில்களை கேட்டு தெரிந்து கொண்டேன். மாவட்ட நிர்வாகிகளுக்கு எல்லாம் திருப்தி ,ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை எனக்கு ஏமாற்றம் தான். ஆனால் அது என்ன வென்று நான் இப்போது சொல்ல விரும்ப வில்லை.பின்னர் கூறுகிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்.

இஸ்லாம் மத குருமார்களுடனான சந்திப்பு ரொம்ப இனிமையான சந்திப்பு சகோதரத்துவம்,அன்பு,அமைதி, நாட்டு நிலவ வேண்டும் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்கள். நான் அதற்கு என்னால் முடிந்த அளவிற்கு உதவுவதாக கூறினேன்.

மத குருமார்கள் நன்கு ஆலோசனை செய்து விட்டு பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தியுங்கள் என அவர்களிடம் கூறினேன் என கூறினார்.

ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு தனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்றும், ஏமாற்றம் தான் என்றும் அதை பின்னர் கூறுகிறேன் என கூறி உள்ளார். அது மர்மமாகவே உள்ளது இதனால் கட்சி தொடங்குவது தாமதமாகுமோ என கூறப்படுகிறது.

Related posts