அளப்பரிய காதல், அன்பு: நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் !!

காதலர் தினத்தை முன்னிட்டு, நயன்தாரா உடனான காதல் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த 5 ஆண்டுகளாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகிறார்கள். அவ்வப்போது, இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி மட்டுமே வெளியாகி வருகிறது.

நேற்று (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு, நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிந்து விக்னேஷ் சிவன், “என் அழகான ஸ்டோரிக்கு இப்போது ஐந்து வயது. உன்னோடு காதலால் நிரம்பிய அழகான தருணங்களைக் கொண்ட 5 ஆண்டுகள். உன்னுடைய அளப்பரிய காதலோடும் அன்போடும் ஒவ்வொரு தினமும் காதலர் தினமே” என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த ஆண்டு ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் விக்னேஷ் சிவன். முதல் தயாரிப்பாக நயன்தாரா நடித்து வரும் ‘நெற்றிக்கண்’ படத்தைத் தயாரித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தனது இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தையும் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளார் விக்னேஷ் சிவன்

Related posts