நடிகை சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு பெற முடிவு?

நடிகை சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கில் சமந்தா முன்னணி நடிகையாக இருக்கிறார். 2010–ல் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ, அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல், இரும்புத்திரை, யூ டர்ன் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன.

சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார்.

2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன். ஏ மாய சேசாயே தெலுங்கு படத்தில் நாகசைதன்யாவும், சமந்தாவும் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்போது, அந்தப் படம் ‘ஜானு’ என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை போலவே தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்து அசத்தி உள்ளார். ஜானு திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் திரைப்படங்களில் நடிப்பதை சமந்தா விட்டுவிட முடிவு செய்துள்ளதாக அவர் அளித்த சமீபத்திய பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமந்தாவின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் என்பது உறுதி. ஆனால் இதை இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts