ராதாரவியை எதிர்த்து பாடகி சின்மயி மனு தாக்கல்

டப்பிங் யூனியன் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திரைப்பட பாடகி சின்மயியை உள்ளே அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

டப்பிங் யூனியன் தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின் சார்பில் சின்மயி போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று மனு தாக்கல் செய்வதற்காக சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சின்மயி வந்தார்.

’மீ டூ’ விவகாரத்தின் போது டப்பிங் யூனியனில் சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி உள்ளே வரக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து சின்மயி மனு தாக்கல் செய்தார்.

ஆனால், உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய சின்மயி, எந்த காரணமும் இல்லாமல் விளக்கமும் கொடுக்காமல் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது ஏன்? வாழ்நாள் உறுப்பினர் அட்டை வைத்திருப்பதால் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts