12 வயது சிறுமி கர்ப்பம் வயிற்றுவலி சிகிச்சைக்கு வந்தபோது தெரிந்தது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சில நாட்களாக வயிற்றுவலி இருந்தது. இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் அங்குள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் அந்த சிறுமியின் வயிறு லேசாக வீங்கி இருந்தது. இதனால், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து இருக்கலாம் என்று டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அவர்கள் அந்த சிறுமியை பரிசோதனை செய்தபோது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதும், அதனால் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதும் தெரியவந்தது. இதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுமியை யாரோ ஏமாற்றி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவருடைய பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருப்பதால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டு உள்ளது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்ததும் மேற்கொண்டு விசாரணை நடத்தி, அந்த சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

12 வயது சிறுமி கர்ப்பம் குறித்து டாக்டர்கள் கூறும்போது, அந்த சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறார். வயிற்றில் வளரும் குழந்தையால் அந்த சிறுமிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அவருக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து சட்டரீதியாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றனர்.

Related posts