ராஜித்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்?

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் (27) ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (செய்திப் பின்னணி) கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நடைப்பெற்ற வௌ்ளை வேன் கடத்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ராஜித்த சேனாரத்னவுடன் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்று சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துக்களை தெரிவித்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கடந்த 24 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கடந்த 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் ராஜித்த சேனாரத்னவின் கொழும்பில் உள்ள வீட்டிற்கும் பேருவளையில் உள்ள வீட்டிற்கும் சென்றிருந்த போதிலும் அவர் அந்த இடங்களில் இருக்கவில்லை.

இந்த பின்னணியில், தம்மை கைது செய்வதற்கு எதிராக நீதிமன்ற பிடியாணையை பெற்றுக் கொள்ள ராஜித்த சேனாரத்ன நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அதனை அவரின் சட்டத்தரணிகள் கடந்த 26 ஆம் திகதி மாலை விலக்கிக்கொண்டனர்.

இவ்வாறான நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கடந்த 26 ஆம் திகதி நாரஹேன்பிட்டியவில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், கடந்த 27 ஆம் திகதி வைத்தியசாலையில் வைத்து முன்னாள் அமைச்சர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து வைத்தியசாலைக்கு வருகை தந்த கொழும்பு மேலதிக நீதவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts