மக்கள் வழங்கிய ஆணையை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை

அதிகாரத்தை மாற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை சபாநாயகர் கருஜயசூரிய இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நீர் வழங்கள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன் பாராளுமன்ற அதிகாரத்தை ஐக்கிய தேசிய கட்சியின் கரங்களிலேயே வைத்திருக்கும் நோக்கில் சபாநாயகர் செயற்படுவாரானால் அது பாரிய தவறாகும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஜனவரி நடுப்பகுதியில் குறைக்கப்படுமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேசிய பொருளாதாரம் பாரிய சரிவை சந்தித்துள்ளதுடன், நாட்டின் உற்பத்தித்துறையும் கடுமையான வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எஹெலியகொடவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்ைகயில், தேயிலை, மிளகு, இலவங்கப்பட்டை, முந்திரி ஆகியவற்றின் விலை அதிகரித்து வருகின்றது. இப்பொருட்களின் இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டமையின் காரணமாகவே இப்பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது. இதனூடாக பொருட்களை உற்பத்தி செய்யும் மக்களின் வருமானத்தை அதிகரிக்க கூடியதாக இருக்கும். எமது மக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பையும் விலையையும் பெற்றுக்கொடுக்கிறோம். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான செயற்பாடுகளையே முன்னெடுக்கிறோம். ஜனவரி மாத நடுப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிச்சயம் குறைக்கப்படும் என்றார்.

Related posts