சுமந்திரனின் கருத்து உள்நோக்கம் கொண்டதாகும்


என்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலகு மாறு சுமந்திரனுக்கு கேட்க தகுதி இருக்கின்றதா என்பதற்கு அப்பால் இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயற்பாடு என்றே நான் நினைக்கின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.கஸ்தூரியால் வீதியில் உள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்ச அதிகார பகிர்வுக்கு மறுத்துள்ள நிலையில், அவருடைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவது தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

சுமந்திரனின் கோரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்ட கோரிக்கையாகும். அந்த கோரிக்கையில் நியாயங்கள் இருக்கின்றதா என்பதற்கு அப்பால் அது அரசியல் உள்ளோக்கம் கொண்ட கோரிக்கைதான். அந்த வகையில்தான் அவர் இவ்வாறான கருத்தை சொல்லியுள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்களை நான் கொண்டுவரவில்லை. அந்த அரசில் நான் பங்கெடுத்திருக்கின்றேனே தவிர அவர்களை நான் கொண்டுவரவில்லை. நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்கள்தான் இந்த ஆட்சியை கொண்டுவந்துள்ளார்கள்.

என்னுடைய தேசிய நல்லிணக்கம் காரணமாக எனக்கு அரசில் இடம் கிடைத்துள்ளது. உண்மையில் இந்த அரசில் பங்கு கொள்வதற்கு விரும்பம் இல்லை. நான் தேர்தலில் வெல்லவில்லை என்பதால்தான் அதில் பங்கெடுக்க விரும்பவில்லை.

கொழும்பில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள், மத பெரியார்கள், புத்திஜீவிகள், பொது மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கத்தான் அமைச்சுப் பொறுப்பினை ஏற்றேன்.

என்னை இப்போது சமுத்திரத்திற்குள் தள்ளி விட்டுள்ளனர். என்னுடைய இரண்டு கைகளிலும் பெரிய கருங்கல்களை கட்டிக் கொண்டுதான் நீந்துகின்றேன். தேசிய அமைச்சு, தமிழ் மக்களுடைய பிரச்சினை என்பதே அந்த இரு கருங்கற்களுமாகும். கடந்த காலங்களில் சமுத்திரங்களில் நீந்தி அனுபவம் உள்ளது. நீந்த முடியாது என்று எனக்கு ஒன்றும் இல்லை. கருங்கல்லை கட்டிக் கொண்டு நீந்துவதா இல்லையா என்பது அப்போதுள்ள நிலைமை.

சுமந்திரன் இந்த கோரிக்கையை என்னிடத்தில் கேட்பதற்கு அவருக்கு தகுதி இருக்கின்றதா? இல்லையா? என்பதற்கு அப்பால் உள்நோக்கத்துடனே அவர் சொல்லியுள்ளார் .

மேலும் தமிழ் மக்கள் மத்தியில் மாற்றுத் தலைமை மாற்றுத் தலைமை என கூறுபவர்களை நம்ப வேண்டாம். அவர்கள் உள்நோக்கம் கொண்டு செயற்படுகின்றனர். தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக இப்போது புதிய திட்டங்களை தீட்டி வருகின்றனர். இவர்கள் மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மேலும் உயர்த்துவதற்காக முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.என்றார்

Related posts