இன்றைய முக்கியமான இந்திய செய்திகள் 21.12.2019 சனி காலை

இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்பட வேண்டும், அப்படி என்றால் இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு ஏன் தரக்கூடாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறியதாவது:

‘‘பொருளாதார நசிவு உட்பட நாட்டில் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. இதனை திசை திருப்பும் வகையில் குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சிறுபான்மையினர் மட்டுமல்லாமல் இந்த நாட்டின் நலனை விரும்பும், ஒற்றுமையை விரும்பும் எவரும் குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஏற்க முடியாது.

குடியுரிமைச் சட்டம் நாட்டின் ஒற்றுமையை அழித்து, மதம், மொழி, இனம் என நாட்டை பிளவுபடுத்தும் செயல் இதனை ஏற்க முடியாது. வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அப்படி என்றால் இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு ஏன் தரக்கூடாது.’’ எனக் கூறியுள்ளார்.

——–

ஆட்சியே போனாலும் சரி; குடியுரிமை திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டேன் என முஸ்லிம்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே இன்று (டிச.21) கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜான்குமார், சிவா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமையை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக கண்டனப் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்கள் மத்தியில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தாலும் சரி, மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த விடமாட்டோம்.

தமிழகத்தில் சிறுபான்மை இன மக்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு செயல்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

——

மத-இன பாகுபாடு பார்க்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (டிச.21) வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் வேலையிழப்பு, வேலையின்மை, விலையேற்றம், பணவீக்கம் மற்றும் பொருளாதாரமே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள், காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்திற்கான சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் தடை சட்டம், பாபர் மசூதி நிலம் இந்துக்களுக்கே என வரவைத்த தீர்ப்பு, இப்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

ஒரு குறிப்பிட்ட மதத்தினரை ஒதுக்கும் இச்செயலை இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கவில்லை. இருந்தும் மற்றவர்களையெல்லாம் காவிக் குடையின் கீழ் கொண்டுவந்துவிடலாம் என்ற குரூர ஆசையாலேயே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் இதன் விளைவு மகா மோசமானது. நாடே பற்றி எரிகிறது. முதலில் பற்றிக் கொண்டது அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள். அசாமிலோ பாஜக பெரும்புள்ளிகள், தலைவர்கள், அமைச்சர்கள் வீடுகளெல்லாம் தீக்கிரையாயின; 12 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு எதிராக தனித்து நிற்கின்றனர். இன்னும் சில பேர் பாஜகவை எதிர்த்தால் பாஜக அமைச்சரவையே கவிழ்ந்துவிடும்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியே குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணிக்குத் தலைமை தாங்கினார்; என் பிணத்தின் மீதுதான் இச்சட்டம் இங்கு வரமுடியும் என்றார்.

மாணவர்களின் போராட்டம் டெல்லியையே மிரள வைத்தது; அதனால் மாணவர்கள் கொடூர தாக்குதலுக்குள்ளாகினர். இதனை எதிர்த்து மற்ற மாநிலங்களிலெல்லாம் மாணவர் போராட்டம் வெடித்தது.

பாஜக ஆளும் கர்நாடகாவில் நடந்த போராட்டத்தில் இருவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்; உத்தரப்பிரதேசத்திலும் சிலர் பலியாகினர்.

இப்படி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் தன்னெழுச்சியான போராட்டங்களை ஒடுக்கும் பாஜக அரசுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை என்று பெரிய நகரங்களிலெல்லம் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இச்சட்டத்தை 8 மாநிலங்கள் அமல்படுத்தமாட்டோம் என்றன; மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர், கேரளா, புதுச்சேரி ஆகியவை. இவை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள்.

தமிழ்நாடும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலம்தானே, அது எப்படி? குடியுரிமை திருத்தம், சட்டமாகக் காரணமே தமிழ்நாடு அதிமுக அரசுதான். ஒருவர் பாக்கியில்லாமல் அமைச்சரவையே ஊழல் புகார் மற்றும் வழக்கில் சிக்கியிருப்பதையும் 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகும் மறுநிமிடமே அதிமுக ஆட்சி கவிழக்கூடியதையும் பாஜகதானே பாதுகாத்துவருகிறது. அதனால்தான் தனது 11 மாநிலங்களவை எம்பிக்களையும் ஒரு பாமக எம்பியையும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து ஓட்டுப்போடச் செய்து சட்டமாக்கியது அதிமுக.

அதிமுகவின் இந்த வரலாற்றுத் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது என்பதை தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்லும் வண்ணமே தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை வரும் 23-ம் தேதியன்று நடத்த இருக்கின்றன திமுக தலைமையிலான 12 கட்சிகள்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என்பதோடு, கடந்த மக்களவைத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யமும் இதில் இணைகிறது.
திரைப்படத் துறையினர் மற்றும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் யாவருக்குமே இந்த 23-ம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் திமுக தலைவர்.

23-ம் தேதி போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்வைக்கப் போகும் முழக்கம் இதுதான்:

“மத்திய பாஜக அரசே, முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழருக்குக் குடியுரிமை மறுக்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரான, மத-இன பாகுபாடு பார்க்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறு! பாஜகவின் அடிமை அதிமுகவே, இந்த பாசிச குடியுரிமை திருத்த மசோதா சட்டமாக நீ வாக்களித்ததே காரணமாகும்; இது மன்னிக்கவே முடியாத வரலாற்றுத் துரோகமாகும்; இதிலிருந்து உனக்கு மீட்பே கிடையாது” என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Related posts