இணையவாசிகளைச் சாடிய நிவேதா தாமஸ்

கொஞ்சம் கண்ணியம், மரியாதை கொடுங்கள் என்று இணையவாசிகளைச் சாடியுள்ளார் நடிகை நிவேதா தாமஸ்

சமீபமாக இணையத்தில் நடிகர்களைக் கிண்டல் செய்வதும், திட்டுவதும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மேலும், நடிகர்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது ஆபாசமாகக் கேள்விகள் கேட்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த விவகாரத்தில் இயக்குநர் சேரன், ராஷ்மிகா மந்தனா இருவருமே சமீபத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். தற்போது அதில் நிவேதா தாமஸும் இணைந்துள்ளார். தமிழில் கமல் நடித்த ‘பாபநாசம்’ படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் நாயகியாக நடித்தார். அவர் நடித்த படங்கள் வெற்றியடையவே, முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் நிவேதா தாமஸ். பல கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.
அதில் அவர், “நண்பர்களே… உங்கள் நேரத்தைச் செலவிட்டு என்னுடன் பேசியதற்கு நன்றி. உங்களின் சில ஜாலியான கேள்விகளுக்குப் பதில் சொன்னது நன்றாக இருந்தது. எப்போது திருமணம், இவரைப் பற்றி ஒருவார்த்தை, பாய்ஃப்ரெண்ட், என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா, கன்னித்தன்மையுடன் இருக்கிறார்களா உள்ளிட்ட சில விநோதமான கேள்விகளை நான் புறக்கணித்துவிட்டேன்.

ஒரு சக மனிதரிடம் பேசுகிறீர்கள் என்பதை உணருங்கள். கொஞ்சம் கண்ணியம், மரியாதை கொடுங்கள். மீண்டும், நீங்கள் செலவிட்ட நேரத்துக்கு நன்றி. விரைவில் (மீண்டும்) சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார் நிவேதா தாமஸ்.

Related posts