தடைகளை கடந்து தனுஷ் படம் திரைக்கு வருகிறது

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி பண பிரச்சினைகளால் இடையூறுகளை சந்தித்து ஒருவழியாக 2018-ல் முடிந்தது.

படத்துக்கு தணிக்கை குழு ‘யூஏ’ சான்றிதழும் அளித்தது. ஆனாலும் தொடர்ந்து பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதால் பல மாதங்களாக திரைக்கு வராமல் படம் முடங்கியது. பேச்சுவார்த்தைகள் நடத்தி படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் கடைசி நேரத்தில் தடை ஏற்பட்டு ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டு வந்தன. இது தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பட நிறுவனத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பர் 6-ந்தேதி வெளியாக இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. மிக விரைவில் வெளியிட மேலும் உழைத்துக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.

இந்த நிலையில் பலமுறை தாமதமான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தடைகளை கடந்து வருகிற 29-ந்தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

Related posts