சினேகாவை மணந்ததால் வாழ்வில் நல்ல மாற்றம்

சினேகாவை மணந்த பிறகு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என்று நடிகர் பிரசன்னா கூறினார்.

சினேகாவும் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டு 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் விஹான் என்ற ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு சினேகா குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

பிரசன்னா திருட்டுப்பயலே-2 படத்தில் வில்லன் வேடத்தை ஏற்று நடித்திருந்தார். மலையாளத்தில் அறிமுகமான பிரதர்ஸ்டே படம் சமீபத்தில் திரைக்கு வந்து கேரளாவிலும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது மாபியா என்ற படத்தில் அருண் விஜய்யுடன் நடித்து வருகிறார். மலையாள படத்தில் நடித்தது குறித்து பிரசன்னா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே எனக்கு ஆசை இருந்தது. என்ஜினீயரிங் படித்த போதும் அந்த எண்ணம் மனதில் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த லட்சியம் நிறைவேறியது.

எனது வாழ்க்கையை சினேகாவுக்கு முன்பு சினேகாவுக்கு பின்பு என்று பிரிக்கலாம். சினேகாவை மணந்த பிறகு வாழ்க்கையில் நல்ல நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்டமிட்டேன். பிரதர்ஸ்டே படம் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது. இது மலையாளத்தில் எனக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். மலையாளத்தில் சரளமாக பேச கற்றுக்கொண்டேன்.

இவ்வாறு பிரசன்னா கூறினார். மனைவி சினேகா மகன் விஹானுடன் பிரசன்னா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts