நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான இடத்தில் மனித எலும்புக் கூடு

பிரபல நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான இடத்தில் மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிகுடா என்ற ஊரில் 40 ஏக்கர் விளை நிலத்தை நாகார்ஜூனா வாங்கினார். இந்த மாதம் முதல் வாரத்தில் நாகார்ஜூனாவின் மனைவியான நடிகை அமலா, அந்த விளைநிலத்தைச் சென்று பார்வையிட்டார்.

இயற்கை விவசாயம் செய்யும் பொருட்டு, மண்ணின் தன்மை குறித்து ஆராய்வதற்காக ஒரு நிபுணர் குழுவையும் அனுப்பி வைத்தார். அந்தக் குழுவானது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, துர்நாற்றம் வீசியுள்ளது.

விளைநிலத்தின் அருகே இருந்த பழைய பொருட்கள் அறையில் பார்த்த போது மனித எலும்புக் கூடு கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற போலீசார் எலும்புக் கூட்டை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 35 வயது மதிக்கத்தக்கதாகக் கருதப்படும் நபர், 6 மாதத்திற்கு முன் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். உயிரிழந்த நபர் குறித்தும், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts