இன்றைய முதன்மை சினிமா செய்திகள் சில..

தமிழ், தெலுங்கில் உருவாகும் சைலன்ட் படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இதற்கிடையில் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் கவுரவ வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்தபோது அனுஷ்கா பங்கேற்றார்.

அப்போது தவறி விழுந்த அவர், கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர் தெரிவித்துள்ளார்.

—–

சூர்யாவை மணந்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி, நாச்சியார் என ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்கும் ஜோ தற்போது ராட்சசி படத்தில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியையாக நடிக்கிறார். இப்படத்தில் நடித்ததுபற்றி ஜோதிகா கூறியதாவது:

புது இயக்குனர் படங்களில் நடிக்காமலிருந்தேன். ஆனால் கவுதம்ராஜ் என்னிடம் இப்படத்தின் கதையை கூறும்போது அவ்வளவு தெளிவாகவும், சமூதாய அக்கறையோடும் கூறினார்.

நடிக்க ஒப்புக்கொண்டேன். பள்ளிக்கூட நாட்களை திரும்பிப்பார்க்கும் கதையாக இது இருக்கும். அரசு பள்ளிகளில் பல வகுப்புகளுக்கு ஆசிரியர், ஆசிரியைகள் இருப்பதில்லை. எனக்கு தெரிந்த ஆசிரியைகளிடம் இதுபற்றி பேசி தெரிந்து கொண்டேன். தரமான கல்வியை மாணவர்களுக்கு தராமல் அவர்களை நீட் தேர்வு எழுதச் சொன்னால் எப்படி எழுதுவார்கள். அதற்கான தளத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். ஆசிரியர் போராட்டம், ஒரு சிலரின் ஒழுங்கீனம் என பல்வேறு தரப்பட்ட விஷயங்களை ராட்சசி படம் அலசுகிறது.

இதில் ஒரு புதிய கிளைமாக்ஸை மக்கள் பார்ப்பார்கள். ஏற்கனவே பள்ளி பிரச்னைகள்பற்றி ‘சாட்டை’ போன்ற படங்கள் வந்ததாக கூறப்படுகிறது. ஒன்றல்ல நூறு படங்கள் இதுபோல் வந்தாலும் பார்க்கலாம். அவ்வளவு பிரச்னைகள் கவனிக்கப்படாமல் இருக்கிறது. ஆக்‌ஷன் படம், ஆக்‌ஷன் படம் என்று கேட்கிறார்கள். அதைவிட இதுபோன்ற சமுதாய அக்கறை கொண்ட படங்கள்தான் அதிகம் தேவை’ என வார்த்தை சாட்டைகளை ஜோதிகா சுழற்றியது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

——

திருநங்கைகள்பற்றி திரைப்படங்களில் நய்யாண்டி செய்து சித்தரித்து வந்தனர். காலப்போக்கில் அது மாறியிருக்கிறது. ‘காஞ்சனா’ படத்தில் திருநங்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை அமைக்கப்பட்டது. அதன்பிறகு வெவ்வேறு படங்களில் திருநங்கைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் முக்கிய வேடத்தில் திருநங்கை நடிக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார் ரஜினி. கண்டிப்பான போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றிருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் ஜீவா என்ற திருநங்கை ரஜினியுடன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர்.

Related posts