விஜய்யை அரசியலுக்கு அழைத்து ‘போஸ்டர்’

ரஜினிகாந்த், கமல்ஹாசனை அடுத்து விஜய்யின் அரசியல் பிரவேசமும் எதிர்பார்ப்பில் உள்ளது. 1992-ல் நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய் இப்போது பிரபல நாயகனாக உயர்ந்து இருக்கிறார். இவரது படங்கள் உலக அளவில் நல்ல வசூலை அள்ளுகின்றன. கேரளா, ஆந்திராவிலும் பெரிய மார்க்கெட் உள்ளது.

வலுவான ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பிருந்தே விஜய் நடவடிக்கைகளில் அரசியல் இருப்பதாக கருதப்பட்டது. 2008-ல் ரசிகர் மன்றத்தை திடீரென்று விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதற்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். இளைஞர் அணி, மாணவர் அணி என்று அரசியல் கட்சிக்கு இணையாக அமைப்புகளை உருவாக்கினார். மாநில-மாவட்ட பொறுப்புகளில் இருந்து ஒன்றிய நகர பூத் கமிட்டி வரை நிர்வாகிகளை நியமனம் செய்து அரசியல் கட்சிக்கு இணையாக அமைப்பை வலுப்படுத்தி வைத்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக மாறலாம் என்கின்றனர். விஜய்யின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

“விரைவில் இருக்குமா மதுரையில் மாநாடு. காத்திருக்கிறது ஒட்டுமொத்த தமிழ்நாடு, மக்களை காப்பாற்ற வா தலைவா, இன்று தமிழக அரசியலில் பெரிய ஓட்டை. நாளை உங்களுக்காக காத்திருக்கு தமிழகத்தின் கோட்டை, தளபதிக்கு அரசியலில் இறங்க தயக்கமில்லை. இறங்கினால் வேறு எந்த கட்சிக்குமே இடமில்லை” என்பன போன்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் இடம்பெற்று உள்ளன. இந்த போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

Related posts