மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஓ.பி.எஸ் மகன்

தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 39 வேட்பாளர்களில், தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றிபெற்றார்.

முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாகவே கடந்த 16-ம்தேதி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் வைக்கப்பட்ட கோவில் கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் எம்.பி என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவை உறுப்பினர் என்று கல்வெட்டில் பெயர் பொறிக்கபட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே எப்படி பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் பொறிக்கலாம் என எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பிறகு அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது. கல்வெட்டு தொடர்பாக கோவில் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த சர்ச்சை முடிந்த நிலையில், தற்போது தேனி நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என பெயர் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தேனி நகரில் பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ரவீந்திரநாத்குமார் பெயரோடு மத்தியஅமைச்சர் என சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts