கீர்த்தி சுரேசின் கதை தேர்வு ரகசியம்

கதை விஷயத்தில் யோசித்து முடிவு செய்கிறேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமா துறையில் நிலைத்து இருப்பது எனது அதிர்ஷ்டம். எவ்வளவோ திறமையானவர்கள் இருக்கும்போது மகாநதி படத்தில் சாவித்திரியாக நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்ததை அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும். கதையை புரிந்து கஷ்டப்பட்டு நடித்தேன். அதற்கான பலனையும் அனுபவித்தேன்.

என்னை பற்றி திரும்பி பார்க்கக்கூட நேரம் இல்லை. ஒரு படத்தில் நடித்து திரைக்கு வந்ததும் அதில் எப்படி நடித்து இருக்கிறேன். இதைவிட சிறப்பாக நடித்து இருக்கலாமோ என்றெல்லாம் யோசிப்பதற்கு கூட நேரம் இல்லாமல் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கையில் வந்துகொண்டே இருக்கின்றன.

கதை விஷயத்தில் மட்டும் யோசித்து முடிவு செய்கிறேன். கதை கேட்கும்போது எனது கதாபாத்திரம் பற்றி யோசிக்காமல் கதை நன்றாக உள்ளதா என்றுதான் பார்ப்பேன். கதை நன்றாக இருந்து அந்த படத்தில் நான் இருந்தால் போதும் என்று நினைப்பேன். மாறாக எனக்கு மட்டும்தான் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்னை சுற்றியே கதை நகர வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட மாட்டேன்.

படங்கள் ஓடுவதற்கு கதை முக்கியம். அதைத்தான் நான் பார்ப்பேன். அதன்பிறகுதான் எனது கதாபாத்திரம் பற்றி பார்ப்பேன். இந்த மாதிரிதான் நான் கதைகளை தேர்வு செய்கிறேன்.”

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

Related posts