மூன்று கண் பாம்பு கண்டுபிடிப்பு

அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கண் பாம்பு ஒன்றின் புகைப்படங்களை வனவிலங்கு அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர்.

ஆன்லைனில் அதிகமாக பகிரப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பை நார்த்தன் டெரிட்டெரி பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை “தனித்துவமானது” என்று விவரித்துள்ளது.

´மன்டி பைத்தான்´ என்று செல்லமாக அழைக்கப்பட்ட இந்த கார்பெட் மலைப்பாம்பு குட்டி, மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களில் இறந்துவிட்டது.

“இதன் தலையில் இருந்த மூன்றாவது கண் இயற்கையான திரிபாக இருந்தது” என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

டார்வினின் தென்கிழக்கில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹம்டி டூ நகருக்கு அருகில் இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இதனுடைய குறைபாடு காரணமாக 40 சென்டிமீட்டர் நீளமான இந்த பாம்பு சாப்பிட கஷ்டப்பட்டது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பாம்புக்கு இரண்டு தலைகள் ஒன்றாக இருக்கவில்லை என்பதை எக்ரே, ஸ்கேன்கள் காட்டியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“இன்னொரு கண் இருப்பதற்கான பள்ளத்தோடும், மூன்று கண்கள் பார்ப்பது போலவும் ஒரே எலும்புக்கூடாக இந்த பாம்பு தோன்றியது” என பேஸ்புக் பதிவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“பரிணாமத்தின் இயற்கையான பகுதியே திரிபுகள்” என்கிறார் பாம்பு நிபுணர் பேராசிரியர் பிர்யான் பிரை.

“ஒவ்வொரு குழந்தையும் ஏதாவது ஒருவகை திரிபை பெறுகிறது. இதுவொரு பிரத்யேக மற்றும் தவறான திரிபாக உள்ளது” என்று குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பிரை தெரிவிக்கிறார்.

“மூன்று கண்களுடைய பாம்பை நான் இதற்கு முன்னால் பார்த்ததில்லை. இரண்டு தலையுடைய நல்லபாம்பு எமது ஆய்வகத்தில் உள்ளது. இணைந்திருக்கும் இரட்டையரில் நாம் பார்ப்பதைபோல இதுவொரு வித்தியாசமான திரிபாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த பாம்பின் மூன்றாவது கண், இரட்டை தலை உருவாகுவதில் சற்று விட்டுபோன பகுதியான இருக்கலாம்” என்கிறார் அவர்.

———–

Related posts