பாலிவுட்டில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ்

தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விக்ரம் பிரபு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்தார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’, தனுஷுடன் ‘தொடரி’ படங்களில் நடிக்க, ‘பைரவா’ படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. பின்னர், சூர்யா, விக்ரம், விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், இரண்டாவது முறையாக ‘சர்கார்’ படத்தில் ஜோடி சேர்ந்தார்.

அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து ஆச்சரியப்படுத்திய கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரியாக வாழ்ந்து தன் திறமையை நிரூபித்தார். தற்போது ஹீரோயினை மையப்படுத்திய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா, கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts