கற்றாழையின் மகத்துவம்

இயற்கை எமக்கு வழங்கிய கொடைகளுள் கற்றாழையும் ஒன்றாகும். பல்வேறு நோய்களைத் தீர்க்கும் நிவாரணியாகக் கற்றாழை விளங்குவதாக சில மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், இதன் மகத்துவத்தை தெரியாதவர்கள் எம்மில் பலர் உள்ளனர்.

மூலிகைத் தாவரமான கற்றாழை பெரும்பாலும் ஆற்றோரங்களிலும் சதுப்பு நிலங்களிலுமே அதிகளவில் வளரும் தன்மை கொண்டது. இதில் பல வகைகள் காணப்படும்போதிலும், சோற்றுக் கற்றாழையே மருத்துவ குணம் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் தயாரிப்பிலும் கற்றாழை முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் (கூழ்) சருமம், கேசத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கவும் சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகின்றது. ஆகையால், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஷாம்பு போன்ற அழகுசாதனப் பொருட்களும் தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

இது மாத்திரமன்றி, சிலர் கற்றாழையில் கறி சமைத்து உணவுடன் சேர்த்து உட்கொள்வதுடன், கற்றாழைச் சாற்றில் பாணம் தயாரித்து அருந்துவதையும் காண முடிகின்றது.

மேலும், ஆயுர்வேதத்தில் கற்றாழை ஜெல் இருமல், சளி, குடற்புண் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரியவருகின்றது.

காற்றாழையின் பயன்பாடு பற்றி அறிவோம்…

சோற்றுக் கற்றாழை ஜெல்லை அரைத்து சிறிது இனிப்புச் சேர்த்து பாணமாக அருந்துவதால் மலச்சிக்கல் இல்லாமல் போகும்.

அத்துடன் வயிற்றுப்புண், வாய்ப்புண், வயிற்றுப்போக்கு நீரிழிவு, தலைவலி, மூட்டுவலி, இருமல், மூலநோய், உடல் உஷ்ணம் ஆகிய நோய்களையும் குணமாக்கும் தன்மை கொண்டது கற்றாழை. மேலும், குடலில் தேங்கிய நச்சுக்களை வெளியேற்றவும் கற்றாழை உதவுகின்றது.

கற்றாழை ஜெல்லை மூட்டுகளின் மேல் தடவிக்கொள்வதோடு. அதன் ஜெல்லை உட்கொள்வதால் உடலில் குறைவுபடும் சத்துக்களை ஈடுசெய்யவும் மூட்டுகள் சரியாக இயங்கவும் வழிவகுக்கின்றது. மேலும், இறந்துபோன செல்களை ஈடுகட்டும் வகையில் புதிதாக செல்கள் உருவாகவும் வழிசெய்கின்றது.

எனினும், கற்றாழை பயன்பாட்டில் கவனம் தேவையாகும்.

அளவுக்கதிமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டுமென்பதுடன், 10 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு கொடுக்கும்போது கவனம் தேவை.

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் கற்றாழை ஜெல்லை உட்கொள்வதைத் தவிர்த்தல் நல்லது.

Related posts