கே.கே.எஸ். துறைமுகத்தை சூழ பொருளாதார வலயம்

காங்கேசன்துறை துறைமுகத்தை சூழ பொருளாதார வலயமொன்று அமைக்கப்பட்டு வர்த்தக துறைமுகமாக அபிவிருத்திச் செய்யப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(14)காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின்போது 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் பல இத்துறைமுகத்தில் முன்னெடுக்கப்படும் என்றார். இத்திட்டத்திற்குத் தேவையான நிலங்களை ஒதுக்கிக் கொண்டு எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அபிவிருத்தி திட்டத்தை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.

வடமாகாணஅபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்திச் செய்வதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டார்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் தற்பொழுது இலங்கை கடற்படையினர் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் இத்துறைமுகம், பொது பொருட்களை கையாலும் துறைமுகமாக மாற்றியமைக்கப்படும்.

இவ்வாறு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தன்னுடைய டுவிட் தளத்தில் நேற்றுக் காலை பதிவிட்டிருந்தார்.

இத்துறைமுக அபிவிருத்தியூடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படுமென தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் 8 மீற்றர்கள் வரையில் துறைமுகம் ஆழப்படுத்தப்படும்.

அலை தடுப்பணை புதிதாக அமைக்கப்படும். கப்பல் உள்நுழைவு பாதை ஒன்று புனரமைக்கப்படுவதுடன் இன்னுமொன்று புதிதாக நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

இலங்கை துறைமுக அதிகார சபை ஆரம்பகட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை 15 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கும். இதைவிட இத்திட்டம் மேலும் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்தரிக்கப்படும்.

Related posts