பரபரப்பாகும் ‘ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ்

படக்குழு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கவுள்ளது. இதற்காக 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் ரஜினி.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பேட்ட’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது இப்படம்.

‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. இதன் படப்பிடிப்பு எப்போது என்பதில் பல்வேறு செய்திகள் வெளியாகின. தற்போது மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் ரஜினி.

முதலாவதாக சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, அதனைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க ஆயுத்தமாகி வருகிறது லைகா நிறுவனம். மேலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts