வீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி

பொலனறுவை தலுகான பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ( 15.01.2019 ) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர்கள் இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது ரிப்பர் வாகனம் மோதியதில் இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ரிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்தோர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டதும் வீதியில் கிடந்த மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த பஸ்ஸின் கீழே அகப்பட்டுக் கொண்டுள்ளது.

ஸ்தலத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் உயிரிழந்த இளைஞர்களையும் அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளையும் உதவிக்கு விரைந்த பொது மக்களின் உதவியுடன் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் விபத்தில் பலியான இளைஞர்கள் எவரென அடையாளம் காண்பதற்காக சடலங்களை பொலனறுவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு தப்பிச் சென்ற ரிப்பர் வாகனத்தையும் அதன் சாரதியையும் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

Related posts