டென்மார்க்கில் நடந்த ரயில் விபத்தில் ஆறு பேர் பரிதாப மரணம் 16 பேர் படுகாயம்

இன்று அதிகாலை சுமார் 07.30 மணியளவில் இடம் பெற்ற ரயில் வண்டி விபத்தில் ஆறு பேர் மரணமடைந்து 16 பேர் படுகாயமடைந்தனர். ரயில் வண்டியில் பயணித்த 131 பேரில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து டென்மார்க்கின் புய்ன் தீவுப்பகுதியையும் தலைநகர் அமைந்துள்ள சேலன்ட் பிரதான தீவையும் கடல் வழியால் இணைக்கும் ஸ்ரோவ பெல்ற் என்னும் பெயர் கொண்ட பாலத்தை அண்டி நடந்துள்ளது. ரயில் வண்டி நீபோ நகரத்தில் இருந்து புறப்பட்ட சொற்ப நேரத்தில் நடந்துள்ளது.

இப்பகுதியில் பாலத்தை வாகனங்கள் கடந்து போகும்போது குறிக்கப்பட்ட ஒரு சிறு தொலைவு சுரங்க பகுதியை ரயில்வண்டி கடந்துபோகும்.

இத்தகைய ஒரு தருணத்தில் ஓகூஸ் நகரத்தில் இருந்து தலைநகர் போய்க்கொண்டிருந்த ரயில்வண்டியின் மீது அதன் அருகு பக்கத்தில் காணப்பட்ட சரக்கு ரயில் வண்டியில் இருந்த பியர்போத்தல் பெட்டி பறந்துவந்து அடித்தது. அவ்வளவுதான் ரயில் சாரதி திகைப்படைந்து கடுமையாக பிறேக்கட்டையை அழுத்த தண்ணடவாளத்தில் பொறி பறக்க ரயில் வண்டி நின்றது.

முடிந்ததா இல்லை.. அடுத்து வந்த செக்கன்கள் மரணப் பேரவலமான விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்தன..

ரயில் வண்டியில் வைக்கப்பட்டிருந்த பயணப் பெட்டிகள் அசுர வேகத்தில் பறந்தன, உடைந்த ரயில்வண்டி கண்ணாடித்துகள்கள் பறந்து துப்பாக்கி வேட்டுக்கள் போல ரயில் பெட்டிகளை துளைத்தன. சுமார் ஒன்றரை செ.மீ அளவில் துளைத்ததாக பயணி ஒருவர் கூறுகிறார்.

பயணிகள் என்னவானார்கள்.. மரணங்கள்.. காயங்கள்.. அதிர்ச்சிகள்.. பனிக் நிலை.. பயங்கரவாதத் தாக்குதலா என்று கதிகலங்கும் அடி.. ரயில் கடலில் விழுந்துவிடுமா என்ற கிலி.. மலாரடிப்பு..

பலத்த சத்தம், ரயில் உடையும் ஓசை என்னவானது.. திகைத்து நின்றாலும்..

முதலில் பல மணி நேரமாக போலீசார் வழமைபோல தகவலை வெளியிடவில்லை, பின்னர் படிப்படியாக செய்திகள் வெளிவரத் தொடங்கி பி.ப.15.00 மணிக்கு போலீசாரின் பத்திரிகையாளர் மாநாடு நடைபெற்றது. அத்தருணம் அவர்கள் தெரிவித்த கருத்தில் இறந்தோர் எண்ணிக்கை ஆறு பேர் என்பது ஊர்ஜிதமானது.

ரயில்வண்டியின் இரண்டு சாரதிகளும் போலீசாரால் விசாரிக்கப்பட்டனர், இதற்கான சிறப்பு ஆய்வை நடத்தும் காவ்வறி கமிஷன் உறுப்பினர் இப்போது அப்பகுதியை அங்குலம் அங்குலமாக பரிசோதித்து வருகிறார்கள்.

விபத்து நடந்ததும் 50 பேர் கொண்ட பணியாளர்கள் 12 வாகனங்களில் வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போது இறந்தோர் காயமடைந்தோரின் குடும்பத்தினர் பலர் அப்பகுதிக்கு வந்துள்ளனர்;. இவர்களுக்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தகவல்கள் வழங்குவதுடன் உணவுப்பொருட்களுடன் உளவியல் சிகிச்சையும் தேவையானோர்க்கு வழங்கப்படுகிறது.

விபத்துக்கு காரஒம் இயற்கையான சூழலா இல்லை வேறும் ஏதாவது காரணங்கள் இருக்குமா என்ற கோணத்தில் உளவுப்பிரிவினர் ஆய்வுகளை நடத்துகிறார்கள். வரும் 14 தினங்கள் இதற்கான தகவல் சேகரிப்புக்கள் தொடரும் என்கிறது போலீஸ். அவர்கள் பத்திரிகையாளர் மாநாடு நடத்த மோப்ப நாய் ஒன்று கேட்க முடியாதபடி அலறிக் கொண்டிருந்தது.

மேலும் சம்பவம் நடைபெற்ற வேளையில் ஸ்ரோவ பெல்ற் பகுதியில் இயல்புக்கு மாறான காலநிலை காணப்பட்டது. வேகமான காற்று காரணமாக கடலின் மேலால் வாகனங்கள் போகும் பாலம் மூடப்பட்டு பல கி.மீ. தெலைவுக்கு வாகனங்கள் காத்துக்கிடந்தன. ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து மணி நேரமாக..

இத்தகைய சூழலில் ரயில் மட்டும் பயணித்துக் கொண்டிருக்க, எதிர்பாராமல் நடந்த திடீர் மோதல் சாரதிகளுக்கு பதகளிப்பை உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளது. இதுபோல பொருட்கள் வழி நெடுகக் கிடந்தால் ரயில் வண்டி முற்றாகவே கவிழ்ந்து பேரழிவு ஏற்படலாம் என்று அவர்கள் கணித்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன. அதற்கு வாய்ப்பான பதட்டமான காலநிலை நிலவியிருக்கிறது.

இனி..

நாளை அதிகாலை நான்கு மணிக்கே பாலத்தை ஊடறுத்து மறுபடியும் ரயில் வண்டிகள் பயணிக்கும் அதுவரை பேருந்து வண்டிகளில் ரயில் பயணிகள் மாற்றப்படுகிறார்கள். இதற்கிடையில் வேகமான காற்று காரணமாக பூட்டப்பட்டிருந்த பாலம் இப்போது திறக்கப்பட்டு கார்கள், லாரிகள் போன்ற வாகனங்கள் போக ஆரம்பித்துள்ளன. ரயில் வண்டியை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன.

இதேவேளை டென்மார்க்கின் தென்பகுதியில் கடல் பெருக்கெடுத்து பல நகரங்களில் புகுந்துள்ளது. வேகமாக அடிக்கும் காற்று கடல் நீரை உந்த்தித் தள்ள தண்ணீர் குடா போல இருக்கும் தரைப்பகுதி நோக்கி பெருக கடல் மட்டம் 170 செ.மீ உயரம்வரை எழுந்து கரைகளை உடைத்துக் கொண்டு நகரங்களின் உள்ளே பாய்கிறது.

முழங்காலுக்கு மேல் கடல் நீர் காணப்படுகிறது. இயந்திரங்கள் மூலம் நீரை இறைத்தும், மண் மூடைகளை அடுக்கியும் கடல் புகுவதை தடுக்க நேற்று இரவில் இருந்து தீயணைப்பு படைப்பிரிவினர் பாடுபட்டு வருகிறார்கள்.

டென்மார்க்கில் இருந்து வேகமாக ஓடிய காற்று சுவீடனில் அல்பிறீடா என்ற பெயருடன் எகிறிப்பாய்ந்துள்ளது. இப்போது அங்கு ஓர் இலட்சம் வீடுகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

ரயில் வண்டியில் சென்று மரணித்தோருக்கு டேனிஸ் மகாராணியாரும், ஸ்ரேற் மினிஸ்டரும் நீதியமைச்சரும் தமது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரேற்மினிஸ்டர் லாஸ்லொக்க ராஸ்முசன் தனது இரங்கலில் வேலைக்கும், விடுமுறை முடிந்து வீடுகள் செல்ல ரயிலில் ஏறியோருக்கும் இவ்வாறு நடந்த விபத்து எதிர்பாராதது. தமது ஆழந்த இரங்கல்களை தெரிவித்ததுடன் கூடவே மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

ரயில் வண்டியில் பயணித்தோர் தகவல்கள் தெரிவிக்க விரும்பினால் 96970000 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளும்படி போலீஸ் கேட்டுள்ளது.

புதிய ஆண்டின் தொடக்கத்தில் நடந்துள்ள அதிரடி நிகழ்வாக இருப்பதால் தொலைக்காட்சிகள் தொடர்ந்து இதை ஒளிபரப்பி வருகின்றன. இறந்தவர்கள் யார்.. டென்மாhக் நாட்டவர்களா இல்லை வேறு நாடுகளின் பிரஜைகளும் இருக்கிறார்களா என்று பூரணமான தகவல் இன்னமும் வெளியாகவில்லை.

பல நாடுகளின் தூதுவர்கள் தமக்கு தகவல் அறிய போன் செய்வதாக போலீஸ் கூறுகிறது. விபத்துக்குக் காரணமான பியர் பெட்டி பறந்தடிக்க காரணமானது DB கார்கோ நிறுவனத்தின் சரக்கு வண்டியாகும்.

புயல்போல காற்றடிக்கும் வேளையில் அப்பகுதியூடாக அருகருகாக சரக்கு வண்டியும் பயணிகள் வண்டியும் போனால் காற்றின் வேகம் மேலும் கூடும். உள்ளே இருக்கும் பொருட்கள் பறந்தடிக்கும். ஆகவே எதிர்காலத்தில் இதைத் தடுக்க ஆவன செய்யப்பட வேண்டும் என்ற குரல்களும் கேட்கின்றன. பியர் பறந்த சரக்கு வண்டியின் பக்கவாட்டில் தறுப்பாள் போட்ட சுவர்பகுதியே காணப்படுகிறது. இது சரியா என்ற கேள்வி இருக்கிறது.

DB. கார்கோ நிறுவனம் இதுபோல தவறு நடக்காத விதத்தில் தாம் செயற்படுவோம் என்கிறது. ஆனால் நஷ்டஈடு கட்டுவது யார்..? அதுதான் இப்போதுள்ள சூடான கேள்வி.

ரயில் வண்டியின் விபத்தை கைத்தொலைபேசியில் படமெடுத்த 40 கார் சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

ரயில் வண்டியின் விபத்தை கைத்தொலைபேசியில் படமெடுத்த 40 கார் சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பிந்திய செய்திகளில் வெறுமையாக நின்ற சரக்கு வண்டி பெட்டியில் ரயில் மோதியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் உடைந்து பறந்த ரயிலின் பாகங்களை கடலடியில் தேடி சூழியோடிகள் இறக்கப்பட்டுள்ளனர். இதற்கான றோபோக்கள் கடலின் குளிரான பகுதியில் தேட ஆரம்பித்துள்ளன…

தொடர்கின்றன செய்திகள்..

அலைகள் 02.01.2019

Related posts