தீபிகா திருமணம்: பல கோடிக்கு இன்சூரன்ஸ்

நடிகை தீபிகா, ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் கடந்த 2 தினங்களாக தென்னிந்திய மற்றும் வட இந்திய முறைப்படி நடந்தது. இவர்களது திருமணம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தபோதும் தீபிகா மற்றும் ரன்வீர் குடும்பத்தினர் திருமணம் முடியும்வரை திகிலுடன் இருந்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு தீபிகா, ரன்வீர் சிங் இருவரும் ‘பத்மாவத்’ படத்தில் இணைந்து நடித்தனர். சரித்திர படமாக உருவான இப்படத்துக்கு வடநாட்டை சேர்ந்த ராஜ்புத் இனத்தவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியதுடன் தீபிகா தலையை வெட்டுவோம் என்றும் ஒரு சிலர் அறிவித்தனர்.

இதனால் பதற்றம் ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட் அனுமதிக்குப்பிறகு வெளியிடப்பட்டது. படம் நன்றாக ஓடி வசூலையும் அள்ளியது. ஆனால் அதில் நடித்த தீபிகா மற்றும் ரன்வீர் குடும்பத்தினர் ஒருவித அச்ச உணர்வுடனே இருந்தனர். இந்நிலையில்தான் தீபிகா, ரன்வீர் திருமணம் நிச்சயமானது.

இந்தியாவில் திருமணம் நடத்தினால் பிரச்னை வருமோ என்று எண்ணியவர்கள் இத்தாலியில் திருமணம் நடத்தினர். மேலும் தங்களது திருமணத்தை டெல்லியில் ஒரு கம்பெனியில் பல கோடிக்கு இன்சூரன்ஸ் செய்திருக்கின்றனர்.

அதற்கான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு தஸ்தாவேஜுகளை தீபிகா, ரன்வீர் தம்பதியினரிடம் அக்கம்பெனி வழங்கியது. தீவிபத்து, வெடிகுண்டு விபத்து, விமான விபத்து மற்றும் இயற்கை பேரிடராலும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்க அந்நிறுவனம் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த தகவலை வட இந்திய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. இது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Related posts