திமுக கூட்டணியின் வேண்டா விருந்தாளி வைகோ..!

வைகோ பிரதமரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் கஜா புயல், ஏழு பேர் விடுதலை போன்ற விவகாரங்களிலும் மேகதாது அணை கட்டும் விவகாரத்திலும் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடியை தமிழ் நாட்டுக்குள் விடமாட்டோம் வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம் என பேட்டி அளித்திருந்தார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

”மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமரைப் பற்றிப் பேசும் போது சற்று நிதானமுடன் பேசவேண்டும், யாரையோ திருப்திப்படுத்த அவர் இவ்வாறு பேசுகிறார். தமிழகத்தில் பிரதமரை அனுமதிக்க மாட்டோம் கருப்புக் கொடி காட்டுவோம் என்றெல்லாம் பேசுகிறார்.

பிரதமர் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார். நீங்கள் முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள். துரைமுருகன் போன்றவர்கள் கூட்டணி குறித்து என்ன பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எப்படியாவது திமுக கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்கிற நிலைக்கு மதிமுக தள்ளப்பட்டுள்ளது என்றால். கேட்கவே வேடிக்கையாக உள்ளது.

திமுகவில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஏளனமாகப் பார்க்கும் நிலைக்கு மதிமுக தள்ளப்பட்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. வேண்டா விருந்தாளியாக மதிமுக உள்ளது”.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related posts