தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயார்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தி நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதே தமது இலக்காகுமென்றும் நாட்டைப் பொருளாதார சுபீட்சமுள்ளதாக அபிவிருத்தி செய்வதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் செயலகத்தில் தம்மைச் சந்தித்த தமிழ் வர்த்தக சமூகத்தினர், சமூக நலப்பணியாளர்கள், புத்திஜீவிகளுடனான சந்திப்பில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதாரத்தில் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததால் அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றதாகக் கூறிய அவர், இந்த நாட்டு மக்கள் அனைவரும் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்ெகாண்டு சகலரும் அந்நியோன்னியத்தையும் சகோரத்துவத்தையும் வளர்த்து, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்ெகாண்டார்.

விசேடமாகத் தமிழ் மக்கள் பொய்ப்பரப்புரைகளை நம்பாமல் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பங்கெடுத்துச் சுபீட்சமான சகவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்ெகாண்டார்.

சில தனி நபர்களும் ஊடகங்களும் பதவிக்கு வரும் அரசாங்கங்களின் நற்பணிகளையும் விமர்சித்து தங்களின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அதற்குத் துணைபோய் விடாமல், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் புதிய அரசியல் பயணத்தில் கைகோர்த்துக்ெகாள்ள வருமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

————–

எதிர்வரும் 07ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படாவிட்டால் மக்களுடன் இணைந்து தமக்கு பாராளுமன்றத்தை கைப்பற்றும் நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எந்தவொரு உறுப்பினரும் இதுவரை அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளவில்லை என்றும், வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதில் சதித்திட்டம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்களுடன் இணைந்து தமக்கு பாராளுமன்றத்தை கைப்பற்றும் சந்தர்ப்பத்தில் ஏதாவது தவறு இடம்பெற்றால் அதற்கு பாராளுமன்றத்தை பிற்போடும் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

————-

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பாராளுமன்றத்தின் சபை முதல்வராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வின் ​போது தினேஷ் குணவர்தன சபை முதல்வராக இருப்பாரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

—————

Related posts