விதார்த்தின் ‘அஞ்சாமை’ பட முதல் தோற்றம் எப்படி?

விதார்த் நடித்துள்ள ‘அஞ்சாமை’ திரைப்படம் நீட் தேர்வை மையப்படுத்திய கதைகளத்தில் உருவாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘இறுகப்பற்று’ படத்துக்குப் பிறகு நடிகர் விதார்த் அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘அஞ்சாமை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும், இப்படத்தை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜா, இயக்குநர் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார்.

நீட் தேர்வின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இப்படம் பேசும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு குறித்து பேசும் முதல் படம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் தோற்றம் எப்படி? – விதார்த் தன்னுடைய மனைவி வாணி போஜன் மற்றும் குழந்தைகளுடன் சிரித்தபடி அமர்ந்திருக்கிறார். அவர்களுக்குப் பின்னால் ‘உயிர்ப் பலி வாங்கிய நீட்’ என்ற வாசகம் அடங்கிய பேப்பர் கட்டிங்கும், அதையொட்டி தீப்பற்றி எரியும் வீடும் இருப்பது போல ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts