தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த கொள்கையளவில்

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நடவடிக்கைகளின் பின்புலத்தில் ராஜபக்ஷக்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடித்தீர்மானிப்போம் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் பரப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முனைப்புக்கள் செய்யப்படுவது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுகின்றபோது அந்த செயற்பாட்டை மையப்படுத்தி தென்னிலங்கை தீவிரவாத, இனவாத சக்திகள் ஒன்றுசேருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதுமட்டுமன்றி அவ்வாறு ஒன்று சேரும் தரப்புக்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகின்ற நிகழ்வுகளும் அரங்கேறலாம்.

குறிப்பாக, தற்போதைய சூழலில் அரசியல் ரீதியாக தோற்றுப்போயிருக்கின்ற ராஜபக்ஷக்குளுக்கு கூட தமிழ் பொதுவேட்பாளர் விடயம் உயிரூட்டும் ஒரு செயலாகக்கூட மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

ராஜபக்ஷக்கள் கடந்த காலத்தில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை தங்களுடைய தேர்தல் வெற்றிக்கானதொரு யுக்தியாகக் கையாண்டனர். அதற்காக தமிழர்கள் தரப்பிலிருந்தே ஒருவரை களமிறக்கியும் உள்ளார்கள். அவ்வாறு பொதுவேட்பாளரை நிறுத்தி விட்டு, புலிகள் வந்து விட்டார்கள் என்று புரளியைக் கிளப்புவார்கள். அதன் மூலமாக அரசியல் இலாபமீட்டுவார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதால் தமிழர் ஒருவரை அவரது வெற்றிக்காக அங்கே கூட போட்டியிடச் செய்தார்கள்.

ஆகவே தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் பேசப்படுகின்ற நிலையில் அதற்குப் ராஜபக்ஷ இருக்கின்றார்களா? சிங்கள, இனவாத சக்திகள் இருக்கின்றனவா என்கிற சந்தேகம் எனக்கு இயல்பாகவே வருகின்றது.

அதுமட்டுமன்றி தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் எமது மக்களின் அரசியல் ரீதியான முயற்சிகளுக்கு எந்தளவுக்கு பொருத்தமானது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

எனினும் குறித்த விடயம் சம்பந்தமாக நாம் கட்சியாக இன்னமும் கூடிப்பேசவில்லை. கட்சியாகவே அவ்விடயத்தினை ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தினை அறிவிப்போம் என்றார்.

——-

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லை.

ஆகவே, எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும். அந்த வகையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும்.

அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிக்கின்றேன். எனினும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் இந்த விடயம் சார்ந்து கலந்துரையாடி கட்சியாக தீர்மானம் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது.

ஆகவே, குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றார்.

Related posts