என்னை பாஜக ‘விலை’க்கு வாங்குவது இயலாத ஒன்று

என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பாஜகவினர் சித்தாந்த ரீதியாக வசதி படைத்தவர்களாக இல்லை” என பாஜகவில் இணையப்போவதாக வந்த வதந்திகளுக்கு பிரகாஷ்ராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவில் இணையப் போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. குறிப்பாக ‘தி ஸ்கின் டாக்டர்’ என்ற எக்ஸ்தள ஐடியில் ஒருவர் “பிரகாஷ்ராஜ் இன்று மதியம் 3 மணிக்கு பாஜகவில் இணைய இருக்கிறார்” என பதிவிட்டிருந்தார்.

இதனை மேற்கோள்காட்டி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ள பிரகாஷ் ராஜ், “பாஜகவினர் அதற்கு முயற்சி செய்தார்கள் என்றே நினைக்கிறேன். அவர்கள் என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு (சித்தாந்த ரீதியாக) பணக்காரர்களாக இல்லை என்பதை உணர்ந்திருக்க வேண்டும். உங்கள் கருத்து என்ன?” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெங்களூரு சென்ட்ரலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்தார். லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் அதனை சேர்க்கக் கோரி லடாக்கில் உண்ணாவிரதம் இருந்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கை பிரகாஷ்ராஜ் சமீபத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts