ஆடுஜீவிதம்’ குறித்து பிருத்விராஜ் மனைவி நெகிழ்ச்சி

பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ மலையாளப் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையொட்டி அவரது மனைவி சுப்ரியா மேனன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த 16 வருட பயணத்தை என்னவென்று சொல்வது? 2006 முதல் பிருத்விராஜை எனக்குத் தெரியும். 2011-ல் நான் அவரை மணந்தேன். நான் அவரை பல படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால், இதுவரை இப்படியான நிலையில் எப்போதும் பார்த்ததில்லை.
உடல் எடையை குறைக்க கடுமையான தொடர் விரதத்தத்தில் நீங்கள் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அப்போது பலமிழந்து சோர்வாக இருப்பீர்கள். கரோனா காலத்தில் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்திருந்த போது, நாம் பிரிந்திருந்தோம்.

போதிய இணைய சேவை கிடைக்காமல் பாலைவன முகாமில் இருந்து நீங்கள் பேசிய அந்த சில நொடிகள் மதிப்பு மிக்கவை. இந்த ஒரு படத்துக்காக பல வேற்று மொழி பட வாய்ப்புகளை நீங்கள் தவறவிட்டதை நான் அறிவேன். இவ்வளவுக்கு மத்தியிலும் கவனத்துடன் நீங்கள் கலைக்காக செய்தது இன்று உங்களுக்காக நிற்கும்.

ஒரு மனிதனை திரையில் காட்ட இயக்குநர் பிளெஸ்ஸியுடன் மொத்த படக்குழுவும் உடல், மனம் என அனைத்தும் அர்பணித்துள்ளீர்கள். உங்களது உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஒன்று மட்டுமே சொல்லுவேன், உங்களுடைய அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே கிடையாது. எனது கண்களுக்கு நீங்கள் எப்போதும் ஒரு ‘கோட்’ ( GOAT) (தலை சிறந்தவன்) தான்” என தெரிவித்துள்ளார்.

Related posts