நூதன முறையில் பெண் தேடும் ம.பி இளைஞர்!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நூதன முறையில் தனது திருமணத்துக்கு பெண் தேடி வருகிறார். அதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சி கவனம் பெற்றுள்ளது.
அந்த மாநிலத்தின் தமோ பகுதியில் வசித்து வருகிறார் தீபேந்திர ரத்தோர். 29 வயதான அவர் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராக செயல்பட்டு வருகிறார். அவர் தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். தனது திருமணத்துக்காக பெண் தேடும் படலத்தை அவர் தொடங்கிய நிலையில் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகும் அவருக்கு அதில் பலன் ஏதும் கிட்டவில்லை. அதனால் தனக்கு தானே பெண் தேடும் முயற்சியை அவர் கையில் எடுத்துள்ளார்.
“நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். எனது பெற்றோர் கடவுளை வழிபடுவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அவர்களது விருப்பம் அது. எனக்காக பெண் தேட அவர்களுக்கு நேரம் இல்லை. அதனால் எனக்கு நானே வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள முடிவு செய்தேன். அதை கருத்தில் கொண்டு ‘திருமணத்துக்கு வரன் தேடும்’ குழு ஒன்றில் சேர்ந்தேன். அதன் மூலம் எனக்கு பலன் கிடைக்கவில்லை. அதனால் நானே அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன்.
எனது பெயர், பிறந்த தேதி மற்றும் நேரம், கல்வித்தகுதி, உயரம், உடல் எடை, ரத்த வகை, தொழில் என என்னை குறித்த அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி விளம்பர பதாகை ஒன்று தயார் செய்தேன். அதை எனது ரிக்‌ஷாவில் வைத்துள்ளேன். எங்கள் ஊரில் என்று இல்லாமல் பிற பகுதியை சேர்ந்த பெண் என்றாலும் திருமணம் செய்து கொள்ள நான் தயார். சாதி, மாத பாகுபாடு நான் பார்க்கவில்லை. அதனால் அனைவரும் என்னை அணுகலாம். சமூகத்தில் மணமகள் போதிய அளவில் இல்லை. அதனால் தான் இந்த முயற்சி. என்னை திருமணம் செய்து கொள்பவரை கண் கலங்காமல் பாதுகாப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் திருமணத்துக்கு வரன் தேட உதவும் மேட்ரிமோனி நிறுவனங்கள், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்கள், செயலிகள் உள்ளன. இருந்தும் மாற்று வழியை தீபேந்திர ரத்தோர் முன்னெடுத்துள்ளார்.

Related posts