500 டெஸ்ட் விக்கெட்டுக்கு குவியும் வாழ்த்து

டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனையை அடுத்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “சாதனைகளை முறியடித்து கனவுகளை செதுக்குகிறார் சென்னை பையன் அஸ்வின்.

தான் வீசும் ஒவ்வொரு திருப்பத்திலும் (டர்ன்), உறுதிப்பாடு மற்றும் திறமையின் கதையை பின்னுகிறார். அவரின் இந்த சாதனை ஓர் உண்மையான ஸ்பின்டாகுலர் மைல்கல்லைக் குறிக்கிறது. மாயாஜால சுழலால் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வினுக்கு வாழ்த்துகள். இன்னும் அதிக விக்கெட்டுகள் மற்றும் வெற்றிகள் பெற வேண்டும் எங்களின் ஜாம்பவானே!” என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்: “லட்சத்தில் ஒரு பவுலரான அஸ்வினுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட். AshWIN the SpinNER இந்த பெயரிலேயே வின்னர் (WINNER) இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்பது மிகப்பெரிய மைல்கல். வாழ்த்துக்கள், சாம்பியன்!”

தனுஷ்: “வாழ்த்துகள் அஸ்வின். இது மகத்தான சாதனை. எங்களை பெருமை அடைய செய்ததற்கு நன்றி.”

டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜாக் க்ராவ்லியின் விக்கெட்டை வீழ்த்தி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார் அஸ்வின். விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு தவறியது.
98-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், குறைந்த போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தினார்.

அதேநேரம், இந்த சாதனையை படைப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500+ விக்கெட்களை வீழ்த்திய ஒன்பதாவது பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, லயன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த சாதனையை இதற்கு முன்னர் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் இரண்டாவது பவுலர் ஆனார் அஸ்வின். அனில் கும்ப்ளே 619 விக்கெட்களை வீழ்த்தி முன்னணியில் உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 37 வயதான அஸ்வின், கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அதோடு 3,166 ரன்களை பதிவு செய்துள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 3வது பவுலராகவும், ஆல்ரவுண்டர்களில் 2-வது இடத்திலும் அஸ்வின் உள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 500 விக்கெட் சாதனையை அஸ்வின் எட்டினார். குறைந்த டெஸ்ட் போட்டிகள் (98) மற்றும் குறைந்த பந்துகளை (25,714) வீசி 500 விக்கெட்களை கைப்பற்றி வீரர்களில் இரண்டாவது இடத்தில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த போது அவர் தெரிவித்தது..

“நீண்டதொரு பயணமாக இது அமைந்துள்ளது. இந்த சாதனையை என் அப்பாவுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். அனைத்து நேரத்திலும் என்னுடன் அவர் இருந்துள்ளார். நான் பேட்ஸ்மேனாக மட்டுமே இருக்க விரும்பினேன். ஆனால், எதிர்பாராத விதமாக சுழற்பந்து வீச்சாளர் ஆனேன். நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது புதிய பந்தில் பவுலிங் செய்ய முத்தையா முரளிதரன் விரும்பவில்லை. அதனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
டீசென்டான முதல் தர கிரிக்கெட் அனுபவம் எனக்கு இருந்தது. நான் டெஸ்ட் பவுலரா என சந்தேகித்த நபர்களும் உள்ளனர். இதோ 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த சாதனை மோசமானது இல்லை. நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

இந்தப் போட்டியை இங்கிலாந்து டி20/ஒருநாள் போட்டி போல அணுகுகிறது. ஆனால், நாங்கள் எங்களது திட்டத்தில் உறுதியாக இருக்கிறோம். அது எங்களுக்கு கைகொடுக்கும் என நம்புகிறோம். இந்தப் போட்டி இப்போதைக்கு இரண்டு பக்கமும் சமநிலையில் தான் உள்ளது” என தெரிவித்தார்.

Related posts