இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகிறார் சிறிதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் இன்று (21) இடம்பெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது 47 மேலதிக வாக்குகளினால் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

இதன்போது எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளையும், சிவஞானம் ஸ்ரீதரன் 184 வாக்குகளையும் பெற்றதோடு சீனித்தம்பி யோகேஸ்வரன் எவ்வித வாக்குகளையும் பெறவில்லை.

ஆரம்பத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற மூவருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டுவதற்கான நேரம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இணக்கப்பாடு எட்டப்படாததன் காரணமாக வாக்களிப்பு இடம்பெற்றது.

குறித்த வாக்களிப்பில் 321 பேர் வாக்களித்திருந்தனர்.

எனினும் குறித்த வாக்களிப்பில் மத்தியகுழு உறுப்பினர்கள் 43 பேரும், மேலதிகமாக 9பேரும், தொகுதிவாரியாக 280 பேர் (யாழ்ப்பாணம் – 75, கிளிநொச்சி – 20, முல்லைத்தீவு – 25, மன்னார் – 25, வவுனியா – 20, திருகோணமலை – 30, மட்டக்களப்பு – 50, அம்பாறை – 35) உட்பட 332 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

—–

இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஒரு ஜனநாயக ரீதியான உரையாடல் ஊடாகவும் ஜனநாயக ரீதியான செயல்முறையின் ஊடாகவும் வரலாற்றில் முக்கிய வரலாற்றை பதித்துள்ளோம். என்னுடன் போட்டியிட்ட எம்.ஏ.சுமந்திரன் சீ.யோகேஸ்வரன் ஜயாவும் இணைந்து கட்சியுனுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் எமது மக்களின் உரிமைக்காக தேசிய இருப்புக்காக தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம் என தமிழரசு கட்சியின் புதிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் சூழுரைத்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் 47 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்ற சிவஞானம் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

என்னை தெரிவு செய்வதற்கு காரணமாக இருந்த இயற்கை என்னும் இறைவனுக்கும் எனக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்த அந்த பொதுசபை உறுப்பினர்களின் மிகப் பெறுமதியான வாக்குகளால் தவைவராக தெரிவு செய்ததற்கு முதலில் எனது நன்றிகள்.

இன்று இது பலபேருக்கு பல நம்பிக்கைகளை தந்திருக்கின்றது பல இளைஞர் யுவதிகள் கட்சி பற்றிய அதிகமான அக்கறை கொள்ளவைத்துள்ளது என்னுடன் போட்டியிட்ட நண்பர் எம்.சுமந்திரன் சீ.யோகேஸ்வரன் ஜயாவும் இணைந்து கட்சியுனுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் எமது மக்களின் உரிமைக்காக தேசிய இருப்புக்காக தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து எங்களுடைய பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம் அந்த கடமையை சரியாக செய்வோம் அதற்காக பலதடவை பல ஊடகங்கள் ஊடாக எங்களுடைய ஒற்றுமையையும் பலத்தையும் தெளிவுபடுத்தியிருந்தோம்

நண்பர் சுமந்திரன் கூட பலதடவை தெளிவாக பல இடங்களில் சொல்லியிருந்தார் ஆகவே எங்களுடைய பங்கு என்பது இனம் சார்ந்தது தமிழ் தேசியத்தினுடைய இருப்பு சார்ந்தது எங்களுடைய இனத்துக்கான அடிப்படை உரிமைகள் சார்ந்தது அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் எல்லோரும் எங்களது கடமைகளை ஒன்றாக பலப்படுத்துவோம் என்றார்.

——–

ஜனநாயக தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மிகிழ்ச்சியளிப்பதாகவும், தலைவர் சிறீதரனுக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என்றும் சக தலைமைப்பதவிப் போட்டியாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானபின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழரசுக்கட்சித் தலைவருக்கான தேர்தலிலே மிக ஆரோக்கியமாக, எமது கட்சி உட்கட்சி ஜனநாயகத்தினை நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நடாத்திக்காட்டியிருக்கின்றது.

இதிலே வெற்றிபெற்ற நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது தலைவர் மாவை சேனாதிராஜா வழிநடாத்திய தமிழரசுக்கட்சிப் பொறுப்பு, இப்பொழுது சிறிதரனுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.

இந்தப் பயணத்திலே நாம் தொடர்ந்தும் ஒன்றாகவே பயணிப்போம். இதை நாம் இருவரும் தேர்தல்காலத்திலும் தெளிவாக மக்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். அப்படியாகவே தொடர்ந்து பயணிப்போம்.

ஆகவே எனது முழுமையான ஆதரவினை தற்போது ஜனநாயக முறையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள, தலைவர் சிறீதரனுக்கு முழுமையாக வழங்குவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்

Related posts