யாழில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியது என்ன ?

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு யாழில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு 4 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது எனவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

——-

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை (4) மாலை 4 மணியளவில் சென்றடைந்தார்.

யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உள்ள மைதானத்தில் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த ஜனாதிபதி வாகன தொடரணியாக யாழ். மாவட்ட செயலகத்தை சென்றடைந்தார்.

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதியின் பங்கேற்புடன் யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமானது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பழைய பூங்காவுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

பழைய பூங்காவிற்கு அருகில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து வைத்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts