சட்டவிரோதமாக இயங்கிய கல்வி நிறுவனம் சுற்றி வளைப்பு

கொழும்பு பம்பலப்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அந்நிறுவனத்தின் பணிப்பாளர் எனக் கூறப்படும் யுவதி ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

24 வயதுடைய சந்தேக நபர் கிரியுல்ல நாரங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களை உள்வாங்குவதற்கும், ஒன்லைன் கருத்தரங்குகளை நடத்துவதற்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு தேவையான டிப்ளோமாக்கள் மற்றும் உயர் டிப்ளோமாக்கள் போன்ற கல்வித் தகுதிகளை வழங்குவதற்காகவும் சமூக ஊடக தளங்களில் விளம்பரம் செய்துள்ளது.

எந்தவொரு சட்ட அங்கீகாரமும் இன்றி கல்விச் சேவைகளை வழங்கிய பின்னர், போலியான டிப்ளோமா சான்றிதழ்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

குறித்த நிறுவனம் உள்ளூர் அல்லது சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யாமல் இயங்கி வந்ததாகவும் அங்கு கல்வியை மேற்கொள்பவர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை அறவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிறுவனம் தொடர்பாக இதுவரை பொலிஸாருக்கு 43 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

குறித்த நிறுவனம் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அனுமதியையும் பெறவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சுமார் 1,000 பேர் இந்த மோசடிக்கு பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த நிறுவனத்தின் இணைப் பணிப்பாளராக செயற்பட்டு தற்போது தலைமறைவாகவுள்ள மட்டக்குளியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts