மிக்ஜாம் புயல் | சென்னையில் இரவு வரை கனமழை

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவரும் நிலையில் இன்று இரவு வரை மழையும், காற்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கு, வட கிழக்கு 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தீவிரப் புயலாக வலுப்பெறும். இது வடதமிழகம், தெற்கு ஆந்திரத்துக்கு இணையே நகர்ந்து நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை கரையைக் கடக்கும். இதனால் இன்று இரவு வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று தொடரும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் கனமழை நீடிப்பதால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பிரதீப் ஜான் தகவல்: சென்னையில் கடந்த 2015-க்குப் பின்னர் மீண்டும் அதே வீச்சிலான கனமழை பெய்துவருவதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார். வெள்ள பாதிப்புகளை கண்காணிக்கும் அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள பிரதீப் ஜான் இத்தகவலை ஊடகப் பேட்டியில் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ”தற்போது மேகக்கூட்டம் சென்னைக்கு அருகே உறுதியாக ஒரே இடத்தில் திரண்டுள்ளது. அது மிகவும் அடர்த்தியாக உள்ளது. அதனால் இன்று இரவு வரை சென்னையில் கனமழை தொடரும். பலத்த காற்றும் இருக்கும். புயல் நெல்லூரை நோக்கி நகர நகர சென்னையில் மழை படிப்படியாகக் குறையும்” என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில் மழை நின்றால் தான் வடிகால் கால்வாய்கள் வழியாக தண்ணீரை வெளியேற்ற முடியும். மழைநீரை இப்போதைக்கு மோட்டார் வைத்து வெளியேற்றினாலும் வடிகால் கால்வாய்கள் நிரம்பியுள்ளதால் பயன் ஏதும் இல்லை. ஆகையால் மழை நின்ற பின்னரே தண்ணீரை வெளியேற்ற முடியும் என்றார். மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள தாம்பரம், வேளச்சேரி பகுதிகளுக்கு 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு சென்றுள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதல் வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts