கண்ணகி’ ட்ரெய்லர் எப்படி?

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் நடித்துள்ள ‘கண்ணகி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணகி’. இதில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கைமூன் என்டர்டெய்ன்மென்ட், இஎஸ் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு மலையாள இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வரும் 15-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (நவ.03) வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – வெவ்வேறு சூழல்களில் வாழும் நான்கு பெண்களின் கதைகள் தனித்தனியே காட்டப்படுகின்றன. பலமுறை பெண் பார்க்கும் நிகழ்ச்சிகள் நடந்தும் திருமணம் கைக்கூடாமல் இருக்கும் அம்மு அபிராமி, கணவனின் வற்புறுத்தலால் விவாகரத்துக்கு விண்ணப்பித்து நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் வித்யா பிரதீப், திருமண உறவின் மீது நம்பிக்கை இன்றி லிவிங் டூகெதரில் வாழ விரும்பும் ஷாலின், வயிற்றில் இருக்கும் குழந்தையை கருவிலேயே கலைக்க நினைத்து, பின்னர் அது நடக்காமல் போனதால் விரக்தியில் இருக்கும் கீர்த்தி பாண்டியன். இந்த நால்வரை சுற்றித்தான் இப்படம் நகரப் போகிறது என்பதை ட்ரெய்லரில் தெரிந்து கொள்ளமுடிகிறது.

’நான் வேணும்ன்னா அப்படியே வந்து நின்னுடுறேன்ப்பா… ஒரு நாலஞ்சு பேரா வந்து பார்த்துட்டு போக சொல்லுங்கப்பா’ என்று அம்மு அபிராமி பேசும் வசனம் மனதை கனக்கச் செய்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவில் அடர்த்தியான காட்சிகளும், ஷான் ரஹ்மானின் பின்னணி இசையும் படத்தின் தீவிரத்தன்மையை கடத்துகின்றன. நான்கும் தனித்தனி கதைகள் என்றாலுமே நான்கும் திருமணம் என்ற ஒற்றைப் புள்ளியிலேயே சூழல்வதாக தெரிகிறது.

Related posts