தமிழரசு கட்சி தலைமைக்கு இருவர் போட்டி

தமிழரசு கட்சி தலைமைக்கு இருவர் போட்டியிடுகிறார்கள் என்று சொல்வது தவறு. பலருடைய பெயர் முன்மொழிய படுகிறது. அது கட்சி அடிப்படை உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கூடி வாக்களித்து அதை தீர்மானிப்பார்கள். மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயமாக நான் அதனை கருதுகிறேன்.எவர் வெற்றி பெற்றாலும் மற்றவர்கள் தொடர்ந்து இணைந்து கட்சி அங்கத்தவர்களாக நாங்கள் செயல்படுவோம் என ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (1) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்டுக்கரை குளத்தில் உள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும், அதனுடன் தொடர்பு பட்ட மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (1) காலை கட்டுக்கரை குளம் பகுதியில் ஒரு சந்திப்பு இடம் பெற்றது. அதில் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எவற்றை முன்எடுக்கலாம் என்பது குறித்து அந்த விவசாய அமைப்புகளோடு நீண்ட ஒரு உரையாடல் நடத்தப்பட்டது.

வருகின்ற நாட்களில் சில சட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக தீர்மானித் திருக்கிறோம் .அத்தோடு மன்னார் மாவட்டத்திற்கு வந்துள்ளமையினால் கட்சி உறுப்பினர் களோடும் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் சம்பந்தமாக ஒரு சிறு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று இருக்கிறது.

2024 ஆம் ஆண்டு இலங்கையில் பல தேர்தல்கள் இடம் பெறலாம்.

எங்களுக்கு தெரிந்த படி அடுத்த வருடம் நாட்டிலே தேர்தல்கள் பல நடை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஜனாதிபதி எந்த தேர்தலை நடைபெறாமல் தடுத்து வைத்திருந்தாலும் கூட 2024 செப்டம்பர், அக்டோபர் மாதம் அளவிலே ஜனாதிபதியினுடைய பதவி காலம் முடிவடைகிறது. அது முடிவடைவதற்கு முன் செப்டம்பர், அக்டோபர் மாதம் அளவிலே ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தியே ஆக வேண்டும்.

ஆகையினாலே அதற்கு முன்னதாக பாராளுமன்றம் கலைக்கப்படுமா? அல்லது அதற்குப் பிறகு பாராளுமன்றத்திற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. பாராளுமன்றம் தொடர்ந்து இயங்குமா? என்பது இப்பொழுது தெரியாமல் இருக்கிறது.

ஆனால் எது எப்படியாக இருந்தாலும் தேர்தல் ஒன்று நிச்சயமாக இன்னும் ஒரு வருட காலத்துக்குள் நடைபெற வேண்டும். ஆகையினாலே தெற்கிலே விசேடமாக அதை குறித்த பலவிதமான வியூக அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. இன்றைக்கு இருக்கிற சூழ் நிலையிலே ஒருவருக்கும் 50 சதவீதத்திற்கு கூடுதலான வாக்குகள் எடுப்பது முடியாத ஒரு விடயமாக தோன்று கிற காரணத்தினாலும், தமிழ் மக்களுடைய வாக்குகள் சம்பந்தமாக திரும்பவும் ஒரு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஆகையினாலே நாங்கள் எங்களுடைய நிலைப்பாடு குறித்து மிகவும் அவதானமாகவும், ஒரு நீண்ட கால சிந்தனையோடும் செய்ய வேண்டியதாக இருக்கிறது.இது எங்களுக்கு கிடைத்திருக்கிற இன்னொரு சந்தர்ப்பம். ஆகையினாலே இந்த தேர்தல் விடையங்களில் கட்சிகளோடு நாங்கள் ஏற்கனவே பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு இருக்கின்றோம்.

தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக அவர்கள் நிலைபாடுகள் குறித்து சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. நாட்டிலே இருக்கிற மற்ற பிரச்சினைகள் விசேஷமாக பொருளாதார பிரச்சினை சம்பந்தமாக நான் சென்ற ஆண்டில் இருந்து கட்சி தலைவர் கூட்டம் ஒன்றை ஒழுங்கு படுத்தி அழைத் திருக்கின்றேன்.

அதற்கு பல கட்சி தலைவர்கள் வந்திருக்கிறார்கள். சென்ற வாரமும் அதற்கு முதல் வாரமும் கூட அப்படியான ஒரு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.அதிலும் பலர் வந்து கலந்து கொண்டார்கள். அதை தொடர்ந்து மற்ற விடையங்கள் சம்பந்தமாகவும், வேறு கொள்கை நிலைப்பாடுகள் சம்பந்தமாகவும் அப்படியான கூட்டங்கள் நான் அடுத்த வருடத்தில் நடந்த திட்டமிட்டுள்ளேன். ஒரு தனி பாராளுமன்ற உறுப்பினராக அழைப்பு விடுக்கும் போது அவர்கள் வருகிறார்கள்.

ஆகையால் இந்த கொள்கை சம்பந்தமான விஷயங்களை ஆட்சியை அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுதல், தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பவை குறித்தும் நாங்கள் பொதுவான கலந்துரையாடல்களில் ஈடுபடுகிறோம்.தேர்தல்கள் அண்மிக்கும் போது நாங்கள் இந்த கலந்துரையாடல்களை அடிப்படையாக வைத்து மக்களுக்கு எங்களடைய நிலைப்பாடுகளை சொல்லி அந்த வேலைகளை எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளை எடுக்கலாம் என்று நினைத்திருக்கிறோம்.

மாவீரர் தின நினைவேந்தலின் போது பயங்கரவாத தடுப்பு சட்டத்தையும் உபயோகித்துள்ளனர்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஏழு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் வழக்குகள் தாக்கல் செய்த போது அங்கே நான் ஒன்றரை மணி நேரம் ஒரு வாதத்தை முன் வைத்து அதன் பிரதிபலனாக அங்கே எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அங்கே முழுமையாக பொலிஸாரின் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.

ஏன் என்றால் அவர்கள் குற்றவியல் நடவடிக்கை தண்டனைக் கோவை 106 ஆம் பிரிவின் கீழ் செய்யப்படுகிற விண்ணப்பம் என்பது இப்படியான சூழ்நிலைக்கு முற்றிலும் பொருத்தமற்றது என்பது என்னுடைய வாதமாக இருந்தது.

அதை நீதிபதி அங்கே ஏற்றுக்கொண்டார். ஆனால் வேறு பல நீதிமன்றங்களில் சில நிபந்தனைகளோடு இதைச் செய்யலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் சில சில இடங்களில் வேறுபட்டன. சில இடங்களில் முல்லைத்தீவில் விசேஷமாக குறிப்பாக சொல்லப்பட்டது சிவப்பு,மஞ்சள் கொடிகள் பயன்படுத்தலாம், கார்த்திகை பூ பயன்படுத்தலாம் என்று குறிப்பாக சொல்லப்பட்டது.

ஆனால் பல இடங்களில் குறிப்பாக சொல்லப்படவில்லை பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு கீழ் செய்யப்பட்ட விதிகளுக்கு மாறாக நடக்காமல் தேசிய பாதுகாப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் என்று பொதுவான கருத்துக்கள் கூறப்பட்டிருந்தது.சில இடங்களில் சில இலச்சினைகள் பயன்படுத்தியமை, அல்லது படங்களை உபயோகித்தமை போன்றமை மீள் உருவாக்கம் என்று சொல்லி பயங்கரவாத தடுப்பு சட்டத்தையும் உபயோகித்துள்ளனர்.அது தவறானது விடயம்.அது சம்பந்தமாக நாங்கள் நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டு இருக்கிறோம். இதுவரைக்கும் 09 பேர் நாடு பூராகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு விடயமாக நாங்கள் இப்பொழுது அதை கையாளுகிறோம். இது அரசாங்கம் செய்திருக்கும் மிகவும் மோசமான ஒரு விடயம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டது என சொல்லப்படுகிற வேளையிலே பயங்கரவாத தரப்பு சட்டத்தை ஒரு நினைவேந்தல் நிகழ்வு சம்பந்தமாக உபயோகிப்பது என்பது ஒரு பார தூரமான விடயம். அதனை நாங்கள் கண்டிக்கிறோம். அதற்கு எதிர் நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்க இருக்கிறோம்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனம் சட்டத்தை மீறும் செயல்

பொலிஸ் மா அதிபர் நியமனம் சட்டத்தை மீறு கின்ற செயல். ஏற்கனவே பாராளுமன்றத்திலும் வெளியிலும் நான் கூறி இருக்கிறேன். சட்டத்தரணிகளுடைய ஒன்றிணைவு என்ற ஒரு குழுவும் இதனை வன்மையாக கண்டித்து இருக்கிறது. அரசியலமைப்பு பேரவையினுடைய அனுமதி இல்லாமல் போலீஸ் மா அதிபர் நியமிக்கப்பட முடியாது. ஒரு பிரதி பொலிஸ்மா அதிபரை கூட நியமிக்க முடியாது.

ஜனாதிபதி ஓட்டு மொத்தமாக அரசியலமைப்பை மீறி செயல்படுகிறார். இந்த விடயத்திலே வெறுமனே பதவி உயர்வு அது யார் கூடுதலாக மூத்தவராக இருக்கின்றார் என்பதை பார்க்காமல் இதற்கு உரியவரை நியமிப்பது அத்தியாவசியமாக இருக்கிறது.

தற்போது அவர் நியமித்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் என்பவர் பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு நபர்.

அவர் இந்த பதவிக்கு பொருத்தமற்றவர். ஆகையினாலே இந்த நியமனத்தை யும் நாங்கள் கண்டிக்கிறோம். அரசியல் அமைப்பை தெரிந்து கொண்டே மீறும் செயல். இதை நான் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன். ஜனாதிபதி ஒருவர் அரசியல் அமைப்பை தெரிந்து கொண்டே மீறினால் ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு அது போதுமான காரணமாக கூட இருக்கிறது.

இலங்கை -இந்திய மீனவர்களின் பிரச்சினை

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வந்து அத்துமீறி மீன் பிடியில் ஈடுபடுகின்றனர்.இந்த பிரச்சனையை நான் பல காலமாக அணுகி வருகிறேன்.ஏன் சட்ட மூலங்கள் கொண்டு வந்திருக்கிறேன். இலங்கை அமைச்சர்களோடு டெல்லிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி இந்திய மத்திய அரசாங்கமும் இழுவைப்படகுகள் நிறுத்தப்பட வேண்டும் என்கிற ஒரு கூட்டறிக்கை செய்யப்பட்ட போது நானும் இலங்கை தூதுக் குழுவில் அங்கம் வகித்திருந்தேன். அதை தொடர்ந்து தான் நான் கொண்டு வந்த சட்டம் இயற்றப்பட்டது.

தமிழரசு கட்சி தலைமைக்கு இருவர் போட்டியிடுகிறார்கள் என்று சொல்வது தவறு

இது எங்களுடைய கட்சியின் யாப்பின் அடிப்படையிலே தலைமை பதவிக்கு சிலருடைய பெயரை ஒரு குறித்த முறையிலே கட்சி உறுப்பினர்கள் பிரேரிக்கலாம். அப்படியாக இவருடைய பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய சம்மதத்தோடு தான்.

ஆனால் மற்றவர்கள் தான் எங்களுடைய பேரை பிரேரித்திருக் கிறார்கள். அப்படியாக ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் பிரேரிதிக்கப்படுகிற போது எங்களுடைய யாப்பிலேயே அது எப்படியாக அந்த தெரிவு நடைபெற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஜனநாயக கட்சி என்ற அடிப்படையிலே ஜனநாயகத்திலே பரிநாம வளர்ச்சியடைந்தோர், முதிர்ச்சி அடைகிற நிலையிலே ஒரு தலைமை பதவிக்கு பலர் தகுதி உடையவர்களாக இருப்பது அந்த கட்சியினுடைய ஒரு பலமான விடயம். பல கட்சிகளுக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்று வாழ்நாள் தலைவர்களே வைத்துக் கொண்டுள்ள கட்சிகளைப் போல் அல்லாது எங்களுடைய கட்சியிலே பலருக்கு அந்த தகுதி இருக்கிறது.

பலருடைய பெயர் முன்மொழிய படுகிறது. அது கட்சி அடிப்படை உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கூடி வாக்களித்து அதை தீர்மானிப்பார்கள். மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயமாக நான் அதனை கருதுகிறேன்.எவர் வெற்றி பெற்றாலும் மற்றவர்கள் தொடர்ந்து இணைந்து கட்சி அங்கத்தவர்களாக நாங்கள் செயல்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts