பத்திரிகை சுதந்திரம் குறித்து மோடியுடன் பேசினேன்

இந்தோ – அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடியுடன் கணிசமான விவாதங்களை நிகழ்த்தியதாகவும், ஜி20 உச்சி மாநாட்டில் மோடியை சந்தித்தபோது மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

வியட்நாம் தலைநகரில் ஹனோயில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: “ஜி 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்திய பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வந்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம்.

எப்போதும் போல, மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வளமான இந்தியாவை கட்டியெழுப்புவதில் பொதுமக்கள் மற்றும் சுதந்திரமான ஊடகங்களுக்கு உள்ள முக்கிய பங்கை நான் மோடியிடம் எடுத்துக் கூறினேன். இவ்வாறு பைடன் கூறினார்.

மேலும், “உலகெங்கிலும் உள்ள மக்கள் சந்திக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உலகின் தலைமையை உணர்த்துவதற்கும், எங்களின் அர்பணிப்பை நிரூபிப்பதற்கு அமெரிக்காவுக்கு இது மிகவும் முக்கியமான தருணம்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீடித்த முன்னேற்றத்தில் முதலீடு செய்தல், காலநிலை மாற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல், உணவு பாதுகாப்பினை வலுப்படுத்துதல், கல்வி மற்றும் உலகளாவிய சுகாதரம் மற்றும் சுகாதார பாதுக்காப்பு ஆகியவைகளில் கவனம் செலுத்துவது. எங்களுடைய பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான நேர்மையான பார்வையுடன் அமெரிக்கா ஒரு பங்குதாரராக இருப்பதை உலகுக்கு நாங்கள் காட்டியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேல் வழியாக இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் திட்டம் பற்றி பேசிய ஜோ பைடன், “இது மாற்று பொருளாதார முதலீட்டுக்கான அளவிலாத வாய்ப்புக்களை திறக்க இருக்கிறது என்றார். மேலும், உச்சி மாநாட்டில் சட்ட விரோதமான உக்ரைன் போர் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், மாநாட்டில் நியாமான மற்றும் நீடித்த அமைதிக்கான தேவை குறித்த குறிப்பிடத்தக்க உடன்பாடு இருந்தது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் அளித்த ஜோ பைடன், “வியாட்நாம் மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகளைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்றும் அவர் சீனாவுடன் பனிப்போரை தொடங்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் ஜி 20 மாநாட்டின் இடையில் சீன பிரதமர் லி குயங் – ஐ சந்தித்து, நீடித்த தன்மை பற்றி பேசியதாகவும் பைடன் தெரிவித்தார்.

முன்னதாக வெள்ளிக்கிழை நடந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியின் இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு பின்னர் வெளியிட்டப்பட்ட கூட்ட அறிக்கையில், “சுதந்திரம்,ஜனநாயகம், மனித உரிமைகள், உள்ளடக்கிய தன்மை, பன்முகத்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்குமான சமமான வாய்ப்புகள் போன்ற முக்கியமான காரணிகளே இருநாட்டின் உறவுகளை பலப்படுத்துவதாக அமைந்துள்ளன என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

Related posts