இந்தியாவுடனான உறவை பாதிக்கும் – வீ.ஆனந்தசங்கரி

சீனாவை விட அளவிலும் சனத்தொகையிலும் மிகச் சிறிய நாடாக கணப்படுகின்ற இலங்கை மீது சீனா செலுத்தும் ஆதிக்கம் அயல் நாடான இந்தியாவின் உறவை பாதிக்கும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

சனிக்கிழமை (02) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை காரணமாக வைத்து சீனா உதவி என்ற போர்வையில் கடன்களை வழங்கி இலங்கையை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.

சீனாவின் இந்த ஆதிக்கமானது அயல் நாடான இந்தியாவை சீண்டிப் பார்க்கும் ஒரு செயல்பாடாகக் காணப்படுகிறது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொருளாதார, கலாசார மற்றும் சமூக ரீதியான நீண்ட வரலாற்றைக் கொண்ட தொடர்புகள் இருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் கடந்து சீனா இலங்கை மீது பொருளாதார ரீதியான ஆக்கிரமிப்பைச் செலுத்துவது இலங்கையையும் இந்தியாவையும் பகையாளிகளாக பார்ப்பதற்கு செய்யும் ஏற்பாடாகும்.

இதன் தொடர்ச்சியாக சீனாவில் இருந்து இம்மாத இறுதிப் பகுதியில் ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகவே, இலங்கை மீது சீனா கொண்டுள்ள ஆதிக்கத்தை மேலும் தக்கவைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், இத்தகைய செயற்பாடு இலங்கை – இந்தியா உறவுகளை சீண்டிப் பார்ப்பதாக அமையும் என கூறினார்.

Related posts